Viral
இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க பட்ஜெட்டில் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு!
2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். அதில், மக்கள் நலன் சார்ந்த எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த நிதி நிலை அறிக்கையில் பாஜக தன் கொள்கைகளை தீவிரமாக பரப்ப சாதமாக பயன்படுத்திக் கொண்டதாக விமர்சனம் எழுந்துள்ளது.
நேற்றைய தினம் நடைபெற்ற நாடாளுமன்ற நிதி நிலை அறிக்கை கூட்டத்தில் கல்வியில் காவியை புகுத்த பல திட்டங்களை நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பில், "உயர்கல்விக் கொள்கையை வகுக்க தனி ஆணையம், 'இந்தியாவில் படிப்போம்' என்ற திட்டம்.
மேலும் இந்தி பேசாத மாநிலங்களில், இந்தி ஆசிரியர்களை நியமனம் செய்து, இந்தியை கற்றுக்கொடுக்க ரூ.50 கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 25 சதவிகிதத்திற்கும் மேலாக உருது பேசும் மக்கள் இருந்தால், அங்கு உருது ஆசிரியர்களை நியமிக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதே 25% மக்கள் கணக்கு இந்திக்கு இல்லை. இந்தி பேசும் மக்கள் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி இந்தி கற்பிக்கப்படும் என்கிறது மத்திய அரசு.
முன்னதாக, தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை பா.ஜ.க அரசு வெளியிட்டது. அதில், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மூன்றாவது மொழியாக கட்டாய பாடத்தில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்கு இந்தி பேசாத மாநிலங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தது.
தமிழகம் ஒரு படி மேலே சென்று, இந்தியை தமிழகத்தில் திணிப்பதை அனுமதிக்க முடியாது என போராட்டம், கண்டன அறிக்கை, மக்களவையில் குரல் எழுப்புதல் என தனது எதிர்ப்பை வலுவாக பதிவு செய்தது. இந்த எதிர்ப்பிற்கு பிறகு, இந்தி கட்டாயம் என்ற வார்த்தை நீக்கப்பட்டது.
ஆனால், மும்மொழிக் கொள்கை கைவிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதது. மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டால், மூன்றாவது மொழியாக இந்தியை மாணவர்கள் தேர்வு செய்ய வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி ஆசிரியர்களை நியமிக்க 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
கூட்டாட்சியின் குரலை நெரிக்கும் தொகுதி மறுவரையறை : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி எதிர்ப்பு!
-
விஜய் தமிழ்நாட்டு மக்களுக்காக எந்த போராட்டக் களம் வந்துள்ளார்? : நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி!
-
”தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய பாஜக அரசு செவிசாய்த்தே ஆக வேண்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
-
”குறையும் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம்.. பாகுபாடு காட்டும் பாஜக” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
கருப்புக்கொடி போராட்டம் டிரெயிலர்தான் மெயின் பிக்சரை பார்க்க ஆசைப்பட கூடாது - CM MK Stalin எச்சரிக்கை!