Viral

நூறு வயதை தொட்டு வாழும் சமூகப் போராளி கே.ஆர்.கவுரியம்மா-கேரளாவே கொண்டாடும் புரட்சி நாயகி !

கேரள அரசு கொண்டாடும் பெண் ஆளுமை கே.ஆர்.கவுரியம்மா. 1919ம் ஆண்டு களத்திபரம்பில் ராமன், பார்வதி தம்பதிக்கு பிறந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்த அவர், இளம் வயதில் விடுதலை போரை பார்த்து வளர்ந்தவர். பின்னர் திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் படித்துவிட்டு வழக்கறிஞராகப் பணியாற்றினார். ஈழவர் இன மக்களில் சட்டம் படித்த முதல் பெண் இவராவார்.

அதன் பின் அரசியலுக்குள் நுழைந்தார். அவரின் அரசியல் பயணத்திற்கு அவரின் அண்ணனின் போராட்ட வரலாறே காரணம். அவரது சகோதரர் சுகுமாரன். அவர் தேத்தின் மீது கொண்டிருந்த இருந்த அக்கறையினால் புன்னப்புரா - வயலாறு புரட்சியில் பங்கேற்றார்.

அவரின் இந்த போராட்டக் குணத்தை பார்த்து வளர்ந்த கவுரிம்மா அரசியல் ஈடுபாடு ஏற்பட்டு தன்னை கம்யூனிஸ்ட் இயக்கங்களில் தன்னை இணைத்துக்கொண்டார். தந்தை பெரியார் மற்றும் நாகம்மையார் அவர்களுடன் இணைந்து வைக்கம் போராட்டத்தில் பங்கெடுத்தவர் கவுரியம்மா.

அதன் பின்பு சுகந்திர இந்தியாவில் ஜனநாயக வழியில் தேர்தல் மூலம் கம்யூனிஸ்ட் அரசாங்கம் கேரளாவில் அமைந்தது. அந்த அரசாங்கம் இ.எம்.எஸ் தலைமையில் அமைத்தது. முதல் சட்டமன்றத்தில் உறுப்பினரான ஒரே பெண் எம்.எல்.ஏ கவுரியம்மா என்ற பெருமைக்குரியவர். 1964-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிரிந்தபோது, கவுரியம்மா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.

விடுதலை இந்தியாவில் பல முற்போக்கு சட்டங்களை கேரள இடதுசாரி அரசு கொண்டுவந்தது, அதில் முக்கியமான பங்கினை கவுரியம்மா வகுத்துள்ளார். அதுமட்டுமின்றி இடது ஜனநாயக அரசு கொண்டுவந்த முக்கிய திட்டமான நிலச் சீர்திருத்த மசோதா, உழுபவருக்கே நிலம் சொந்தம், நில உச்சவரம்பு போன்ற சட்ட மசோதாக்களை முன்மொழிந்தவர்.

1952 மற்றும் 1954 ஆம் ஆண்டுகளில் திருவாங்கூர்-கொச்சின் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர் 1957 இல் கேரள சட்டப் பேரவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிலிருந்து தொடர்ந்து இவர் கேரள சட்டப் பேரவை உறுப்பினராக 1960, 1967, 1970, 1982, 1987, 1991, மற்றும் 2001 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இ.எம்.எஸ் தலைமையிலான அரசுகளிலும், ஈ.கே.நாயனார் தலைமையிலான அரசுகளிலும் கிடத்தக்க 20 ஆண்டுகளுக்கு மேல அமைச்சராக இருந்து வந்துள்ளார். இ.எம்.எஸ் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றவர்களில் தற்போது உயிருடன் இருப்பது கௌரியம்மா மட்டுமே.

இவ்வளவு செல்வாக்கை பெற்ற ‘புரட்சி நாயகி’ கே.ஆர்.கௌரியம்மா தனது 100 வயதைக் கடந்துள்ளார். மக்கள் செல்வாக்கு மிகுந்த கௌரியம்மாவின் பிறந்தநாளை கட்சி வித்தியாசமின்றி அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

அவரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக வியாழன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தின் போது சிறப்பு அறிவிப்பை சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் வெளியிட்டார். அப்போது கேரளாவின் புரட்சி நாயகி கே.ஆர்.கவுரியம்மா பிறந்தநாள் விழாவுக்காக வெள்ளியன்று சட்டமன்றத்திற்கு சிறப்பு விடுப்பு அளிக்கப்படுகிறது என தெரிவித்தார்.

மேலும் சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் கவுரியம்மா குறித்து சட்டசபையில் உரையாற்றினார். அந்த உரையின் போது,“போராட்டங்களின் வீரியத்தில் தாயாக, மலையாளக்கரையில் மாற்றத்தின் வழிதிறக்க கனல்வழிகள் ஏற்ற வீரப்பெண். கேரளத்தின் கவுரியம்மாவுக்கு நூறு நிறைவுற்றது. காலம் பாதுகாத்த முன்விதிகளை தூக்கியெறிந்து, வரலாற்றில் தலையீடு செய்து முன் சென்ற கவுரியம்மா, இன்று உயிர் வாழ்கிறார். முதல் சட்டமன்றத்தில் உறுப்பினரான ஒரே எம்.எல்.ஏ அவர்தான். புரட்சியின் கனலாய் தளிர்த்த பூமரம் என்று போற்றப்பட்ட கவுரியம்மாவுக்கு வந்தனம்”என சட்டமன்றத்தில் சபாநாயகர் குறிப்பிட்டார்.

அதையடுத்து முதல்வர் பினராயி விஜயன் கவுரியம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு, வெள்ளிக்கிழமை நடைபெறும் கவுரியம்மா பிறந்தநாள் கவுரவ விழாவில் அனைவரும் கலந்துகொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அதன்படி நேற்றையதினம் ஆலப்புழாவில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கிவைத்தார். இந்த விழாவிற்கு எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா தலைமைத் தாக்கினார். சிபிஐ(எம்) கட்சியின் மூத்த தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் கே.ஆர்.கவுரியம்மாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய ஆவணப்படத்தை வெளியிட்டார்.

அதனையடுத்து கவுரியம்மாவின் வாழ்க்கை வரலாறு குறித்து புத்தகத்தை முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி வெளியிட்டார். பின்னர் கவுரியம்மாவிற்கு பினராயி விஜயன் இனிப்பு வழங்கினார். இதுபோன்ற கட்சி வேறுபாடுகள் இன்றி ஒரு பெண் ஆளுமையின் பிறந்தாள் கொண்டாடியது எல்லோர் மத்தியிலும் உற்ச்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், "கேரளாவின் முதல் சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தவர் கவுரியம்மா. 1957 ல் கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைத்தது. அன்றிலிருந்து, வருவாய் துறை, தேவசம் போர்ட் போன்றவற்றில் அமைச்சராக பணியாற்றினார்.

அதுமட்டுமின்று இடது ஜனநாயக அரசு கொண்டுவந்த முக்கிய திட்டமான நிலச் சீர்திருத்த மசோதா, உழுபவருக்கே நிலம் சொந்தம், நில உச்சவரம்பு போன்ற சட்ட மசோதாக்களை முன்மொழிந்தவர். இ.எம்.எஸ் தலைமையிலான அரசுகளிலும், ஈ.கே.நாயனார் தலைமையிலான அரசுகளிலும் கிடத்தக்க 20 ஆண்டுகளுக்கு மேல தொடர்ந்து அமைச்சராக இருந்து வந்தவர்.

அவர் நாம் வாழும் காலத்தில் வாழும் மிக உயர்ந்த தலைவர்களில் ஒருவர். கேரளாவின் வளர்ச்சிக்கு பெரிய பங்களிப்பை செலுத்தியவர். இடது ஜனநாயக அணிக்கான வாழ் நாள் முழுவதும் உழைத்தவர். அவரின் இந்த 100வது நாள் பிறந்தநாளில் அவரை வணங்குகிறோம்". என கூறினார்.

இந்த வயதிலும் நாளிதழ்கள், புத்தங்கள் வாசிக்கும் பழக்கம் கொண்டுள்ளார். அவரின் இந்த செயல் கேரள மக்களுக்கு எப்போதும் உற்சாகத்தை உண்டாக்கும். அவர் அவர்களின் வழிகாட்டிய திகழ்கிறார்.