Viral

பதிவான வாக்குகளை விட, எண்ணப்பட்ட வாக்குகள் அதிகமானது எப்படி? : EVM குளறுபடி அம்பலம்!

நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று அமைச்சரவையும் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு முன்பே வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைக்கெடு நடக்க வாய்ப்பு உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டினர்.

ஆனால் தேர்தல் ஆணையம் அதனை ஒரு பொருட்டாகக் கூட எண்ணவில்லை. இதனிடையே, இந்தியா முழுவதும் சுமார் 370 தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடிகள் நடைபெற்றுள்ளன. அதில் வாக்குப்பதிவு அன்று பதிவான வாக்களை விட வாக்கு எண்ணிக்கையின் போது இயந்திரத்தில் எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்துள்ளது என்பதை Quint ஆங்கில இணையதளம் செய்தியாக வெளியிட்டுள்ளது.

அதில் இந்தியா முழுவதும் சுமார் 370 தொகுதிகளில் இதுபோன்ற குளறுபடிகள் நடந்துள்ளதாக தகவல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் குளறுபடிகள் நடந்துள்ள தொகுதிகளையும் அந்த இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில்,

  • காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 12,14,086 ஆகும். ஆனால் வாக்கு எண்ணப்பட்டது 12,32,417 ஆகும். அதாவது, 18,331 வாக்குகள் கூடுதலாக எண்ணப்பட்டுள்ளது.
  • அதேபோல், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 11,94,440 ஆகும். ஆனால் எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 12,12,311 ஆகும். அதாவது சுமார் 17 ஆயிரத்து 871 வாக்குகள் அதிகமாக எண்ணப்பட்டுள்ளது.
  • ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 13 லட்சத்து 88 ஆயிரத்து 666 வாக்குகள். ஆனால் எண்ணப்பட்டது 14 லட்சத்து 03 ஆயிரத்து 178 ஆக இருந்துள்ளது. இதில் 14 ஆயிரத்து 512 வாக்குகள் கூடுதலாக இருந்துள்ளது.

இப்படி தமிழகத்தில் மட்டும் பல தொகுதிகளில் 10 ஆயிரம் வாக்குகளுக்கு மேலாக கூடுதலாக வந்தது எப்படி என்ற கேள்வி எழுகிறது.

  • தமிழகம் தவிர உத்திரப் பிரதேசத்தில் மதுரா மக்களவைத் தொகுதியில் வாக்கு இயந்திரத்தில் 10 லட்சத்து 88 ஆயிரத்து 206 வாக்குகள் பதிவாகியிருந்துள்ளது. ஆனால் எண்ணப்பட்டதோ 10 லட்சத்து 98 ஆயிரத்து 112 ஆகும். அங்கேயும் சுமார் 9 ஆயிரத்து 906 வாக்குகள் கூடுதலாக இருந்துள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் தகவல் அளித்தபோதும் தேர்தல் ஆணையம் எதனையும் கண்டுக்கொள்ளாமல், அதற்கு விளக்கம் தரவும் மறுத்துள்ளது என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதற்கு உச்சநீதிமன்றம் ஒரு குழு அமைத்து, இதுகுறித்து ஆய்வு செய்து உரிய தகவலை வெளியிட உத்தரவிட வேண்டும் என்றும் பலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.