Viral
சமூக வலைதளங்களில் கொண்டாடப்படும் ’ஒடிசா மோடி’ யார்? அவரது பின்னணி என்ன?
சில தினங்களுக்கு முன்பு வரை ஒடிசா மாநிலத்தைத் தாண்டி, பிரதாப் சந்திர சாரங்கியை வெளியில் யாருக்கும் தெரியாது. ஆனால், தேர்தல் முடிவு வெளியான இந்த ஒரு வாரத்தில் சமூக வலைத்தளவாசிகள் கொண்டாடும் நபராக அவர் மாறியுள்ளார்.
அதற்குக் காரணம், அவர் குறித்து வெளியான புகைப்படங்கள். அதை வைத்து எளிமையானவர், நேர்மையானவர், ஒடிசாவின் மோடி என்று பல்வேறு பாராட்டுகள். எம்.பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட இவருக்கு மத்திய பா.ஜ.க அரசு மத்திய இணை அமைச்சர் பதவி கொடுத்துள்ளது.
இவ்வளவு பிரபலமான சாரங்கியின் கடந்தகால பாதையை சற்று அலசி பார்ப்போம்.
யார் இந்த பிரதாப் சந்திர சாரங்கி ?
ஒடிசாவில் 1999ம் ஆண்டு இந்துத்துவா கும்பல் ஒன்று ஆஸ்திரேலிய பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின் மற்றும் அவருடைய 2 மகன்களை எரித்துக் கொன்றது. ஒடிசாவையே மிகுந்த பரபரப்புக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தை நிகழ்த்தியது பஜ்ரங் தள் என்கிற அமைப்பு. அந்த சம்பவம் நடந்தபோது, பஜ்ரங்க் தள் அமைப்பின் தலைவராக இருந்தவர்தான் இந்த பிரதாப் சந்திர சாரங்கி.
உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச்சம்பவத்தில், ஆதாரங்கள் இல்லை என்று விசாரணை முடிக்கப்பட்டுவிட்டது. பின்னர் நடந்த ஆய்வில் தாரா சிங் உள்பட 13 பேரைக் குற்றவாளி என 2003ம் ஆண்டில் கட்டாக் நீதிமன்றம் அறிவித்தது.
அதில், முக்கிய குற்றவாளி தாரா சிங்குக்கு தூக்குத் தண்டனையும், மற்ற 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனையை எதிர்த்து பஜ்ரங் தள் குற்றவாளிகள் ஒரிசா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். தாரா சிங்குக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிய சி.பி.ஐ-யின் மனுவை நிராகரித்த நீதிபதிகள், அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்கப்படுவது சாத்தியம் என்று குறிப்பிட்டனர்.
அதேவேளையில், தாரா சிங்குக்கு ஒரிசா உயர் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து அவர்கள் தீர்ப்பளித்தனர். இதற்கிடையில் பிரதாப் சந்திர சாரங்கியின் தூண்டுதலின் பேரில் இந்த சம்பவம் நடந்துள்ளதாகப் பலதரப்பிலும் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், அவர் மீது எந்த வழக்கும் பதியப்படவில்லை.
சாரங்கி பற்றி ஒடிசாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் கூறுகையில், " நாட்டில் நடைபெறும் மத மாற்றங்களுக்கு கிறிஸ்துவ மிஷனரி தீய சக்திகளே காரணம் எனக் கடுமையாக விமர்சித்தவர் பிரதாப் சந்திர சாரங்கி .” என தெரிவித்துள்ளார்
அதன் பின்னர் 2002ம் ஆண்டு பஜ்ரங் தள் உட்பட இந்து வலதுசாரிக் குழுக்கள் ஒடிசா சட்டமன்றத்தில் கலவரத்தை உருவாக்கின. இதில் திட்டமிட்ட தாக்குதல், கலகம் ஏற்படுத்துதல், அரசாங்க சொத்துக்களைச் சேதப்படுத்துதல் ஆகிய வழக்குகளின் அடிப்படையில் சாரங்கி மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
இந்த சம்பங்கள் பற்றி எந்த ஊடங்களும் பேசாமல், அவர் குடிசையில் வாழ்கிறார், சைக்கிளில் வருகிறார், எளிமையாக இருக்கிறார் என்று புகழ் பாடிவருகின்றன. சமூக வலைத்தளங்களிலும் அவரின் உண்மை முகம் தெரியாமல் பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பரப்பும் பொய்த்தகவலை வைத்து கொண்டாடிவருகின்றனர்.
இந்நிலையில், அவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கியபோது, அவரது தொகுதியில் அவரது தொண்டர்கள் கொண்டாட்டங்களில் வெடி வெடித்துக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அவரின் சில ஆதரவாளர்கள் துப்பாக்கியில் வானத்தை நோக்கிச் சுட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதாப் சாரங்கி மீதான வழக்குகள் பற்றிய தகவல்கள் பகிரப்பட்டால், அவை போலிச் செய்திகள் என்று சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டப்படுகிறது. அதே நேரம் பின்னணியை ஆராயமால் அல்லது ஆராய விடாமல், அவரை கொண்டாடி பகிரப்படும் செய்திகளையும் ஆராய வேண்டிய தேவை உள்ளது.
போலி செய்திகள் வேகமாக பரவும் டிஜிட்டல் யுகத்தில், நல்லதோ கெட்டதோ, ஒருவரைப் பற்றி தகவல் பரப்பப்படுகிறது எனில், அதன் உண்மைத் தன்மையை ஆராய வேண்டியது அவசியம்.
Also Read
-
”வெளியான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. எகிறிய தேர்ச்சி விகிதம்.. அசத்திய மாணவிகள்” - முழு விவரம்!
-
”அ.தி.மு.க - வினருக்கு அமைச்சர் பதவி.. த.வெ.க-வின் மோசடி.. துணைபோகும் சபாநாயகர்” - முரசொலி விமர்சனம்!
-
“IND vs AFG Tour.. டெஸ்ட், ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு.. புது வீரர்களுடன் அசத்தல் Squad”
-
பொய்யை மட்டுமே பரப்பும் த.வெ.க! : ஆதாரங்களோடு அம்பலப்படுத்திய The Hindu ஊடகம்!
-
“பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் - இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்” : தி.மு.க வலியுறுத்தல்!