Viral

இலங்கை தொடர் தாக்குதல் எதிரொலி : தமிழகம் முழுவதும் தீவிர சோதனை!

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர் மற்றும் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

அதன்பிறகு இலங்கையில் ஆங்காங்கே குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதாலும், பல இடங்களில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதாலும் அந்நாட்டில் பதற்றம் ஓயவில்லை.

இந்நிலையில், இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலின் எதிரொலியாக தமிழகம் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல், தமிழகத்தின் பிரதான தேவாலயங்களான வேளாங்கண்ணி, தூத்துக்குடி போன்ற பல இடங்களில் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தின் கடலோர பகுதிகளிலும் இந்திய கப்பல் படை, கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.