Videos

‘ஜான்சன்&ஜான்சன்’ மருந்தால் இளைஞருக்கு வளர்ந்த மார்பகங்கள் - ரூ56000 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம்!

அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மருந்து மற்றும் குழந்தைகளுக்கான நுகர்வுப் பொருட்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. சமீப காலமாக இந்நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது.

அப்படித்தான், அமெரிக்காவைச் சேர்ந்த நிக்கோலஸ் முர்ரோ என்பவர் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை பென்சில்வேனியா மாகாணத்தில் பிலடெல்பியா நீதிமன்றம் விசாரித்துவந்தது.

ஜான்சன் நிறுவனத்தின் ரிஸ்பெர்டால் என்ற ஆன்டி சைக்கோடிக் மருந்தை பயன்படுத்திய இளைஞருக்கு பெண்கள் போல மார்பகங்கள் வளர்ந்துள்ளது. இப்படி ஒரு பக்க விளைவு இருக்கும் என்று எந்தவித எச்சரிக்கையையும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் குறிப்பிடத் தவறியதாக அவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையில் தீர்ப்பளித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்டவருக்கு சுமார் 4.83 கோடி இழப்பீடாக வழங்க ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. இந்த அபராதத் தொகையை சரியான நேரத்தில் திருப்பி செலுத்த தவறியதை அடுத்து மீண்டும் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

அதனை விசாரித்த பிலடெல்பியா நீதிமன்றம், இந்திய மதிப்பில் 56,000 கோடி ரூபாயை அபராதமாக விதித்துள்ளது. இந்நிலையில் இந்த குற்றசாட்டு உண்மையில்லை என ஜான்சன் அண்ட் ஜான்சன் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.