Videos

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு : மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை தகவல்!

தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்த சூழலில் மாநிலம் முழுவதும் மக்கள் குடிநீருக்காக அலைந்து வருகின்றனர். உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத சூழலில் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். பத்து நாட்களுக்கு ஒருமுறை, மிகக் குறைந்தளவு குடிநீர் விநியோகம் செய்யப்படும் அவலநிலை உருவாகி உள்ளது.

சென்னை மாநகராட்சியில் தண்ணீர் விநியோகம் 90% பகுதிகளுக்கு நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வருகிறது. மாநில அரசு தண்ணீர் பற்றாக்குறையைச் சரி செய்யப் போதுமான நடவடிக்கை எடுப்பதில்லை எனப் பலர் குற்றம் சாட்டிவருகின்றனர். தண்ணீர் பற்றாக்குறையைக் கண்டித்து மக்கள் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் பிரச்சனை நிலவி வருகிறது. இந்த சூழலில் மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், நாட்டில் உள்ள 855 மாவட்டங்களிலும், 756 நகராட்சி அமைப்புகளிலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களில் 27 மாவட்டங்கள் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டு பிரச்னையை சந்திக்கிறது. நகராட்சியை பொறுத்தவரை 184 இடங்களில் வறட்சி மக்களை வாட்டி வதைக்கிறது. மேலும் இந்தப் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கர்நாடகாவில் 18 மாவட்டங்களும் 7 நகராட்சி அமைப்புகளும் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டில் உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 35 மாவட்டங்களில் வறட்சி நிலவுவதாகவும், டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் கடும் தண்ணீர் பிரச்சனை நிலவுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை நீர் சேகரிப்பு மையங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட வேண்டும், மழை நீர் சேகரிப்பு அமைப்பு இருந்தால் தான் புதிய கட்டிடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களும் நகர்ப்புற அமைப்புகளுக்கு அந்த அறிக்கையில் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.