Tamilnadu
முதலமைச்சர் விஜய்யின் பேச்சை நீக்கச் சொன்ன தி.மு.க : அவைக்காவலர்களை ஏவி வெளியேற்றிய சபாநாயகர்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு மானியக் கோரிக்கை மீதான விவாதம் செப்டம்பர் 3-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ள கொலை, கொள்ளைச் சம்பவங்கள் குறித்துக் கேள்வி எழுப்பினார்.
இந்த விவாதத்திற்கு உடனே பதிலளிக்காமல், 3 நாட்கள் கழித்துப் பதிலளிப்பதாக முதலமைச்சர் விஜய் கூறிவிட்டு அவையிலிருந்து வெளியேறினார்.இதையடுத்து நேற்று மூன்று நாட்கள் கழித்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிப்பார் என்று பார்த்தால், வழக்கம் போல் சினிமா பாணியில் கத்திக் கத்திப் பேசி உரிய பதில்களை அளிக்காமல் தி.மு.க மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மேலும், மிசாவில் சிறைசென்ற முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறித்துத் தேவையில்லாமல் செய்கை ஒன்றைக் காட்டியது, நேரலையில் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்களுக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்தியது.இதற்குப் பிறகு, முதலமைச்சர் விஜய்யின் இந்தச் செயலுக்குத் த.வெ.க அரசுக்கு ஆதரவு கொடுத்துள்ள இடதுசாரிகள் உட்படப் பலரும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இன்றைய சட்டப்பேரவையில், ”சர்க்காரியா கமிஷன், நீதிமன்றத்தில் உள்ள அமலாக்கத்துறை வழக்கு மற்றும் மிசா, முரசொலி மாறன் ஆகியவை குறித்து ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைச் சுமத்தி முதலமைச்சர் விஜய் பேசியவற்றை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்” எனத் தி.மு.க எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கே.என்.நேரு, கொறடா எ.வ.வேலு, கோவி.செழியன் ஆகியோர் வலியுறுத்தினர்.
மேலும், முதலமைச்சரின் பதிலுரை மீது நாங்கள் பேச வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். ஆனால், சபாநாயகர் இதற்கு அனுமதி மறுத்ததோடு முதலமைச்சரின் பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்க முடியாது எனத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.இதற்குப் பிறகு தி.மு.க உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு "நீதி வேண்டும்... நீதி வேண்டும்..." என முழக்கமிட்டனர். இதையடுத்துச் சபாநாயகர் அவைக்காவலர்களை ஏவித் தி.மு.க உறுப்பினர்களை வெளியேற்றினார்.
Also Read
-
கொளத்தூர் வழக்கு எழுப்பிய கேள்விகள் : இயந்திரங்களின் தீர்ப்பே இறுதியானது என்று மாற்றுகிறார்கள் - முரசொலி!
-
“அரசின் தோல்விகள் அம்பலப்படும் என்ற அச்சம்.. பாதாளத்தில் ஜனநாயகம்” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“ஒரு போராளியின் வீரத்தழும்பு.. அது அவமானமல்ல, பெருமிதம்”: முதல்வர் விஜய்க்கு டி.ஆர்.பி. ராஜா பதிலடி!
-
‘இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு.. வேட்புமனுத் தாக்கல் முதல் முடிவுகள் தேதி வரை’ - முழு விவரம் அறிக!
-
சர்க்காரியா கமிஷன் குறித்து நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா? - விஜய்க்கு ஆர்.எஸ்.பாரதி சவால்!