Tamilnadu

400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார் : சோகத்தில் திரையுலகம்!

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த அவர், பெங்களூரிலிருந்து சென்னை திரும்பியபோது திடீரென உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் தற்போது காலமானார். அவருக்கு வயது 94.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துத் தனக்கெனத் தனி இடம் பிடித்தவர் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி. தனது ஏழு தசாப்த காலக் கலைப்பயணத்தில், இவர் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அத்துடன், 300-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும் நடித்துள்ள சௌகார் ஜானகி, ஆரம்பகாலத்தில் வானொலி நிலையத்திலும் பணியாற்றியுள்ளார்.

1950-ல் வெளியான 'சௌகார்' என்ற தெலுங்குத் திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். 1952-ல் 'வளையாபதி' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்தார். தொடர்ந்து பணம் படுத்தும் பாடு, புதிய பறவை, நீர்க்குமிழி, மகாகவி காளிதாஸ், எதிர்நீச்சல், இரு கோடுகள், உயர்ந்த மனிதன், காவியத்தலைவி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றவர்.

இவரது சிறந்த நடிப்பு மற்றும் கலைப் பயணத்தைப் பாராட்டி நந்தி விருது, கலைமாமணி விருது, பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.இவரது மறைவு தமிழ் திரையுலகம் மட்டுமின்றி, இந்தியத் திரை உலகிலும், ரசிகர்களிடையேயும் மிகுந்த அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வெளியாகும் சுற்றறிக்கை.. திரும்பப்பெறும் தவெக அரசு?.. முதல்வரை மிஞ்சிய சூப்பர் பவர் யார்? : திமுக கேள்வி!