Tamilnadu

உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!

மேகதாது அணை விவகாரம் மற்றும் காவிரி நீர் உரிமை பிரச்சினையை வலியுறுத்தி, தஞ்சாவூரில் திமுக சார்பில் நேற்று நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திமுக இளைஞரணி செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறி, இன்று சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் தஞ்சாவூர் காவல்துறையினர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்தனர். பின்னர் அவரை தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகின. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அவர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களின் போது விஜயின் உருவப் பொம்மைகளை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்தப் போராட்டங்களில் ஈடுபட்ட 1,000-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், இன்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்ய அரசு முயற்சிப்பது, இதற்கு வழக்கைத் தாண்டிய அரசியல் பின்புலம் உள்ளதோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் என்பது சட்டமன்றத்தின் முக்கிய பொறுப்பாகும். அந்தப் பொறுப்பில் இருப்பவரை முடக்கிவிட்டு சட்டப்பேரவையை நடத்த வேண்டும் என்ற நோக்கில் அரசு செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, நாளை சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மீதான கைது நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாளை தமிழக சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் குரலையும் ஜனநாயகத்தையும் ஒடுக்க முயலும் நடவடிக்கையாகவே உதயநிதி ஸ்டாலின் கைது பார்க்கப்படுகிறது.

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சட்டரீதியாக அணுகுவதைத் தவிர்த்து, காவல்துறையை பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே, உதயநிதி ஸ்டாலினை உடனடியாக விடுவிப்பதோடு, அவரது கைதால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை கட்டுக்குள் கொண்டு வந்து சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரமான காவிரி பிரச்சினை தொடர்பாக தஞ்சையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் ஆட்சேபகரமான வகையில் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

மேலும், நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்து சிறையில் அடைக்க முயற்சிப்பது ஜனநாயக மாண்புகளை சிதைக்கும் செயலாகவே கருதப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

Also Read: தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!