Tamilnadu

“மின்கட்டண குளறுபடிகளை சரிசெய்ய வக்கற்ற த.வெ.க அமைச்சர்” : அனிதா ராதாகிருஷ்ணன் கடும் விமர்சனம்!

பொறுப்பின் கண்ணியம் மறந்து பேசிவரும் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாரின் அநாகரிக பேச்சு தி.மு.க முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் MLA கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதன் விவரம் வருமாறு:-

புதிதாக பொறுப்பிற்கு வந்த தவெக அரசின் மின்சாரம் மற்றும் சட்டத்துறையின் அமைச்சர் நிர்மல்குமார் அரசியல் அறத்திற்கு புறம்பாக அநாகரிகமான முறையில் தொடர்ந்து பேசி வருகிறார். தூத்துக்குடியில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பேசும் போது தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்திட்ட முன்னாள் முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள் மேற்கொண்ட திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பாதுகாப்பிற்கான நடைபயணத்தை கொச்சைப்படுத்தியுள்ளார்.

அதேபோல் மக்களால் தேர்வு செய்யப்பட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அமைச்சரவையில் பணியாற்றிய என்னைப் பற்றியும் கீதாஜீவன் பற்றியும் அவதூறாகவும் அநாகரிகமாகவும் உரையாற்றியுள்ளார். தனது சொந்த துறையான மின்சாரத் துறையில் ஏராளமான குளறுபடிகள் தினந்தோறும் ஏற்படுகிறது. மின்வெட்டு தொடர் கதையாக இருந்துள்ளது.

இப்போது மின்கட்டண கணக்கீட்டில் பெரும் தவறுகள் நடந்துள்ளது. அரசு வெளியிட்டுள்ள விபரத்தின்படி சுமார் 3.70 லட்சம் குடும்பங்கள் மின்கட்டண கணக்கீடு குளறுபடியாக நடந்துள்ளது என புகார் அளித்துள்ளனர்.

சுமார் 50 முதல் 75 சதவீதம் வரை மின்கட்டணம் உயர்ந்துள்ளது. குளறுபடியான கணக்கீடு முறை இதற்கு காரணமாகும். தனது சொந்த துறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சரிசெய்ய வக்கற்ற திறனற்ற அமைச்சர் 30 ஆண்டுகளுக்கு மேலாக தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் சேவை செய்து வரும் முன்னாள் அமைச்சர்களை மோசமான முறையில் பேசுவது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. தனது அநாகரிக பேச்சை அமைச்சர் நிர்மல்குமார் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Also Read: “தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினை காவிரி.. முன்பே கணித்துதான் எச்சரித்தோம்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!