Tamilnadu

த.வெ.க அரசின் 24 மணி நேர வேலை இதுதான் : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சொல்வது என்ன?

சர்வாதிகார Sofa Model அரசால் பழிவாங்கும் நோக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ள கழக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அவர்களை பாளையங்கோட்டை மத்திய சிறையில் சந்தித்த பின் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

”எங்களின் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் மார்க்கண்டேயன் அவர்கள், கடந்த 8 நாட்களாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். `அரசைத் தவறாகப் பேசிவிட்டார்’ என்று வழக்குப் போட்டு மிரட்டுகின்ற பணியை, இந்த த.வெ.க. அரசு செய்துகொண்டு இருக்கிறது.

எங்கள் தலைவரது அறிவுறுத்தலின் பேரில், அவரைச் சந்தித்து நலம் விசாரிப்பதற்காக வந்திருக்கிறேன். நானும் ஒரு சட்டமன்ற உறுப்பினர். அதனால், அவரைப் பார்ப்பதற்காக வந்தேன். நானும், நம்முடைய முன்னாள் அமைச்சர் அக்கா கீதாஜீவன் அவர்களும், நம் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களும் இன்று நேரில் சென்று, அவரைச் சந்தித்து நலம் விசாரித்து வந்திருக்கிறோம். அவர் மிகவும் தைரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்.

கேள்வி : தொடர்ந்து, தி.மு.க. உறுப்பினர்கள்மீது வழக்குப்பதிவு செய்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்? பழிவாங்கும் நடவடிக்கையாகப் பார்க்கிறீர்களா?

பதில் : இந்த அரசின் ஒரே பணியாகத்தான் இதைப் பார்க்கிறேன். வேறு என்ன அவர்கள் செய்துகொண்டு இருக்கிறார்கள்? தூத்துக்குடியில், திருநெல்வேலியில், த.வெ.க. நிர்வாகிகள்மீது, அவர்கள் கட்சிக்காரர்களே பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்கள். அவற்றையெல்லாம் சட்டமன்றத்தில் பேசியிருக்கிறேன். அதைப் பற்றியெல்லாம் இந்த அரசு கொஞ்சம்கூட செவிசாய்க்கவில்லை. முழுக்க முழுக்க திராவிட முன்னேற்றக் கழகத்தையும், எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களையும் பழிவாங்கும் நடவடிக்கையில் மட்டுமே ஈடுபட்டுவருகிறது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களை சோஃபா கொடுத்து விலைக்கு வாங்குகிறது. நான் யாரைச் சொல்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும். யாரைச் சொல்கிறேன் என்று அவர்களுக்கும் தெரியும், அந்தப் பணிகளைத்தான் இந்த அரசு 24 மணி நேரமும் முழுநேர வேலையாகச் செய்துகொண்டு இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

Also Read: மேகதாது அணை விவகாரம் - “லாட்டரியில் கவனம் செலுத்துபவர்களுக்கு இதெல்லாம் புரியாது” : ரகுபதி பதிலடி!