Tamilnadu

மாணவர்களுக்கு இருக்கும் துணிச்சல்கூட இந்த 'டம்மி' முதல்வருக்கு இல்லை என்பது வெட்கக்கேடு : திமுக ஐடி விங்!

டெல்லியில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி, ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு நீட் தேர்வை எதிர்த்துக் குரல் கொடுத்த விஜய், இன்று முதலமைச்சராக நாற்காலியில் அமர்ந்த பிறகு வாய்மூடிக் கிடக்கிறார்.

அதுமட்டுமன்றி, டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் போராடும் மாணவர்களுக்கு உறுதுணையாக இல்லாமல், அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கிறது விஜய் அரசு. ஆதரவுக் குரல்கூட கொடுக்க முடியவில்லை என்று பார்த்தால், போராடவும் கூடாது என்று பா.ஜ.க.வை விட மோசமான அராஜகத்தைக் கையில் எடுத்துள்ளார் முதலமைச்சர் விஜய்.

சரி, முதலமைச்சர் விஜய்தான் குரல் கொடுக்கவில்லை என்று பார்த்தால், அவரின் அமைச்சர் பட்டாளமோ 'ஜனநாயகன்' திரைப்பட வெளியீட்டு விழாவிற்கு ஆரவாரமாகத் தயாராகி வருகிறது. மாணவர்களின் போராட்டங்களை விட, அவர்களின் தலைவனின் படம்தான் அவர்களுக்கு முக்கியம் போலும்! அதுதானே அவர்களின் குழந்தைகளுக்குக் கல்வியைப் போதிக்கப்போகிறது?

இப்படித் தொடர்ந்து நகைப்புக்குரிய செயல்களைச் செய்துகொண்டு, 'டம்மி'யாகச் செயல்படும் த.வெ.க. அரசுக்கு, தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி தனது கடும் கண்டனங்களைப் பதிவு செய்கிறது

அவர்களது சமூகவலைதள பதிவில், ”​ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து, அவர்களின் எதிர்காலத்தைப் பலியிடும் நீட் அநீதிக்கு எதிராக இன்று இந்திய இளைஞர்களே வீதியில் இறங்கித் துணிச்சலாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

​ஆனால், தமிழ்நாட்டின் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துகொண்டு, ஒன்றிய பா.ஜ.க அரசை எதிர்த்து ஒரு வார்த்தை கூடப் பேசத் துணியாமல், தன் டெல்லி எஜமானர்களுக்குப் பயந்து பதுங்கித் திரிகிறார் இந்த கோழை முதல்வர் விஜய்!

​காவல் துறையின் அடக்குமுறைகளையும் மீறி, மாணவர்கள் நெஞ்சழுத்தத்தோடு ஊடகங்களைச் சந்தித்துத் தங்கள் உரிமைகளைத் தைரியமாக முழங்குகிறார்கள். ஆனால், நடுத்தெருவில் நின்று போராடும் அந்த சாதாரண மாணவர்களுக்கு இருக்கும் ஒரு துளித் துணிச்சல் கூட இந்த 'டம்மி' முதல்வருக்கு இல்லை என்பதுதான் வெட்கக்கேடு" என தெரிவித்துள்ளது.

Also Read: டெல்லியைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் மாணவர் அமைப்பினர் கைது! : எதிர்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்!