Tamilnadu

“ஒளிந்திருந்த பூனை வெளியே வந்துவிட்டது” : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்புக்கு அன்பில் மகேஷ் கண்டனம்!

பள்ளி மாணவர்களுக்கு சாதி விவரத்துடன் அடையாள அட்டை வழங்க முடிவு செய்துள்ளோம் என்ற அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்புக்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், தேசியக் கல்விக் கொள்கை - 2020ன் ஒரு அங்கமாக APAAR(Automated Permanent Academic Account Registry) Card வழங்கும் திட்டம் உள்ளது. அதாவது “ஒரே நாடு ஒரே அடையாள அட்டை” என்ற அடிப்படையில் நமது தமிழ்நாட்டு மாணவர்களின் சுயவிவரத்தை ஒன்றிய அரசிடம் (அதிகாரப்பூர்வமாக!) ஒப்படைக்கும் திட்டம். இதைத்தான் வேறு வடிவத்தில் அமல்படுத்த இருக்கிறார்கள் என்பது த.வெ.க. அரசின் அமைச்சர் பேசியிருப்பதில் இருந்து தெரியவருகிறது. அதுவும் முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க!

தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கவே மாட்டோம் என்றவர்கள், இதுபோன்ற செயல்களில் இறங்கியுள்ளார்கள்.

“இரண்டாயிரம் கோடி என்ன? 10000 கோடி கொடுத்தாலும் NEP-2020ஐ ஏற்க மாட்டோம்” எனச் சொன்ன எங்கள் கழகத்தலைவர் அவர்களின் நெஞ்சுரம் இந்த ஆட்சியாளர்களுக்கும் வேண்டும். அது இல்லாமல் தேவையின்றி நமது மாணவர்களின் அடிப்படைத் தகவல்களை ஒன்றிய அரசிடம் தட்டில் வைத்து மரியாதையோடு கொடுக்கும் வேலையை அறவே கைவிட வேண்டும்.

மாணவர்களின் அடிப்படை தகவல்கள் அடங்கிய ஒரு கார்டு வழங்கப் போகிறீர்களா? அப்படியென்றால் அதில் சாதி குறித்த தகவல்களும் இருக்குமென்றால் அது தேவையில்லாதது!

மாணவர்களின் இரத்த வகை, ஆதார் எண் போன்றவற்றை மட்டும் அறிய வேண்டிய இடத்தில், சாதி குறித்த அடையாளமும் தேவைதானா? இடஒதுக்கீடு மற்றும் அரசின் சமூகநீதி பயன்களை பெற வேண்டிய இடத்தில் மட்டும் சாதிச் சான்றிதழ் விவரங்களை வெளிப்படுத்திக் கொள்ளலாம். அமைச்சர் இதுகுறித்து விரிவான பதில் அளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Also Read: “தமது படைப்புகளால் தொடர்ந்து வாழ்வார்” - ‘பாக்யராஜ் 50’ விழாவை குறிப்பிட்டு மு.க.ஸ்டாலின் உருக்கம்!