Tamilnadu

“ஆளும்கட்சியின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

தமிழ்நாட்டில் சந்திசிரித்துக் கொண்டிருக்கும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையைக் கட்டுப்படுத்த முடியாமல், தி.மு.க. மீது வீண் பழியைப் போட்டு வரும் த.வெ.க. அரசு, தற்போது பழிவாங்கும் நடவடிக்கையைத் தொடங்கிவிட்டது.

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறைச் சோதனையை ஏவிவிட்டுள்ளது த.வெ.க. அரசு. இன்று காலை முதலே அவரது கல்வி நிறுவனங்கள் உட்பட 13 இடங்களில் இந்த அதிரடிச் சோதனை நடந்து வருகிறது.

இந்நிலையில், ஆளும்கட்சியினரின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல தி.மு.க என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் - முன்னாள் அமைச்சர் அன்புச் சகோதரர் திரு. எ.வ. வேலு அவர்களின் வீட்டில் தமிழ்நாடு அரசின் DVAC ரெய்டு நடத்தி வருகிறது. அதற்கு அவர் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறார். சட்டப்படி எதிர்கொண்டு, நீதிமன்றத்தில் அவர் தரப்பு நியாயத்தை நிரூபிப்பார்.

அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன், திமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் என இதுவரை தொடரப்பட்ட ஒரு வழக்கில் கூட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிந்ததில்லை என்பதே வரலாறு.

ஆளும்கட்சியினரின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக! இதைவிடப் பெரிய அடக்குமுறைகளையே பார்த்தவர்கள் நாங்கள். இதையும் எதிர்கொண்டு வெற்றிபெறுவோம்" என தெரிவித்துள்ளார்.

Also Read: குடியிருப்பு ஒதுக்கீட்டில் ‘சாதி பாகுபாட்டை’ உடனடியாக தடுக்க வேண்டும்! : மா.சுப்பிரமணியன் கண்டனம்!