Tamilnadu

“முதலமைச்சர் விஜயிடம் நான் கேட்பது இதுதான்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!

தி.மு.க உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் ஆற்காடு வீராசாமி இல்லத் திருமணத்தை நடத்தி வைத்துப் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்,

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடக்கூடிய கட்சி தி.மு.க என்றும், ஒரு மாநிலக் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தி.மு.க முன்னுதாரணமாக விளங்கிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஒரு தேர்தல் தோல்விக்கே இன்று பல கட்சிகள் காணாமல் போகும் நிலையில், 75 ஆண்டுகாலம் கொண்ட கொள்கைக்காக பாடும் கட்சி தி.மு.க என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், த.வெ.க ஆட்சியில் தமிழ்நாட்டில் பல அக்கிரமங்கள் நடந்து கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.

நாட்டு நடப்புகளை முதலமைச்சர் விஜய் தெரிந்துகொள்ள வேண்டும் அறிவுறுத்திய தி.மு.க தலைவர், தற்போதைய ஆட்சியில் நடக்கும் அக்கிரமங்கள் பற்றிய செய்திகளை முதலமைச்சர் விஜய் படித்துப்பார்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

முதலமைச்சர் விஜயிடம் நான் கேட்பது இதுதான். த.வெ.க ஆட்சியில் தமிழ்நாட்டில் நடைபெறும் அக்கிரமங்கள் குறித்து வரும் செய்திகளை படியுங்கள். குற்றச்சம்பவங்களின் பின்னணி என்ன என்பதை தெரிந்துகொண்டு, அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

இதனிடையே, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”மணமக்கள் சித்தார்த் - ஆஷ்ரயா இணையரின் சுயமரியாதை திருமணத்தைத் தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தியை குறிப்பிட்டுள்ளார்.

மணமக்களை வாழ்த்திய அதேவேளையில், தந்தை பெரியார் காலம்தொட்டு, சுயமரியாதை திருமண மேடைகளை அரசியல் - பகுத்தறிவூட்டும் மேடைகளாக மாற்றியதுபோல், தி.மு.க-வினருடனான அரசியல் உரையாடல் நிகழ்ந்தேறியது சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தகைய சுயமரியாதைத் திருமணங்கள் பெருகிட வேண்டும்! வீடுதோறும் மீண்டும் அறிவார்ந்த அரசியல் உரையாடல் நிகழ வேண்டும்! என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

Also Read: “ஒன்றிய அரசின் அலட்சியம்.. கோவையில் நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை.. தொடரும் நீட் தேர்வு மரணம்”