Tamilnadu

திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயம்... மவுனம் காக்கும் தவெக அரசு; விளாசிய உதயநிதி ஸ்டாலின்!

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என மனித சமத்துவத்தை வலியுறுத்திய திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசி, அவரை குறிப்பிட்ட மத அடையாளத்திற்குள் அடைக்க முயற்சிகள் ஒன்றிய பாஜக ஆட்சியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முன்னதாக, திருவள்ளுவரை காவி உடையிலும், மத அடையாளங்களுடனும் சித்தரித்த புகைப்படத்தை தமிழ்நாடு பாஜக வெளியிட்டது. குறிப்பிட்ட மதத்திற்கு மட்டுமே திருவள்ளுவர் உரியவர் என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அந்தப் படம் அமைந்திருந்ததாகக் கூறி பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அப்போதைய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதே புகைப்படத்தை பகிர்ந்து, திருவள்ளுவரை “சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி” என குறிப்பிட்டிருந்தார். இந்த நடவடிக்கைக்கும் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மேலும், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வுகளிலும் காவி உடையணிந்த திருவள்ளுவர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்ட நிலையில், அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போதைய தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ‘திருவள்ளுவர் திருவிழா’ நிகழ்வில் காவி உடையணிந்த திருவள்ளுவர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய புகைப்படங்கள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார். அந்தப்பதிவில், “எப்போதுமே Mute-ல இருக்கவர் முதலமைச்சரா இருக்காருங்கிற தைரியத்துல ஆளுநர் மாளிகையில திருவள்ளுவருக்கு மறுபடியும் காவி Paint அடிச்சு இருக்காங்க.

தமிழ்நாடு அரசு ஜனவரி மாசத்துல திருவள்ளுவர் நாளை அதிகாரப்பூர்வமா கொண்டாடுது. ஆனா, வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாள்னு புதுசா ஒரு உருட்டு எங்கே இருந்து வந்தது? தி.மு.கழக ஆட்சியில இதே மாதிரி வேலையைப் பார்த்த அப்போதைய ஆளுநரை கடுமையா கண்டிச்சோம்.

சங்கிகளை திருத்துனோம். இப்போ மறுபடியும் தமிழர்களோட சுயமரியாதையை உரசிப்பார்க்குறாங்க. வள்ளுவரை அவமதிக்கும் பாசிஸ்டுகளுக்கும் - அதை அனுமதிக்கும் Sofa Model அரசுக்கும் என்னுடைய கடும் கண்டனங்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்தை முதல்ல பாட permission கொடுங்கன்னு டெல்லியில கேட்ட மாதிரி, இந்த விஷயத்துலயும் முதலமைச்சர் பயந்து நடுங்கக் கூடாது. சட்டம் ஒழுங்கு விஷயத்துல தான் முதலமைச்சர் Silent ஆ இருக்காருன்னா, கொள்கை எதிரிகள் வள்ளுவருக்கு காவி Paint அடிக்கிற அநியாயத்தை தட்டிக் கேட்கவும் தயங்குறது ஏன்?” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் இதுவரை நேரடியாக எந்தக் கண்டனத்தையும் பதிவு செய்யவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும், ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து தவெக சார்பில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் அறிக்கையில், “ஆளுநர்” என்ற வார்த்தையோ அல்லது “கண்டனம்” என்ற சொல்லோ இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.