Tamilnadu

பினராயி விஜயன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே எதிர்க்கட்சித் தலைவர்களை அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை உள்ளிட்ட அமைப்புகளைக் கொண்டு தொடர்ந்து பழிவாங்கி வருகிறது. இதற்கு உதாரணம் டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் என ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது.

இந்த மிரட்டலுக்குப் பயந்து பலரும் பா.ஜ.க-வின் 'வாஷிங் மெஷின்' மூலம் புனிதர்களாகிவிடுகிறார்கள். இதற்குச் சிறந்த உதாரணம், சிவசேனா கட்சியை உடைத்துப் பா.ஜ.க ஆதரவுடன் ஆட்சியில் இருந்துவரும், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் ஏக்நாத் ஷிண்டே. இப்படி இவர்களுடன் கைகோத்துக்கொண்டவர்களை எல்லாம் பா.ஜ.க-வின் ஏவல் துறை ஒன்றும் செய்யாது.

தற்போது கேரளாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது. ஆனால், இந்த சோதனை முடிவில் தயார் செய்யப்பட்ட அறிக்கையின்படி, வீட்டில் இருந்து வழக்கு தொடர்பான எந்த முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த சோதனைக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், தோழர் பினராயி விஜயனுக்கு எதிராக நடத்தப்பட்டுள்ள அமலாக்கத்துறை சோதனைகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். இத்தகைய நடவடிக்கைகள், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக ஒன்றிய முகமைகள் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் வளர்ந்து வரும் போக்கைப் பற்றிய தீவிர கவலைகளை மீண்டும் ஒருமுறை எழுப்புகின்றன.

தற்செயலாக, பினராயி விஜயன் ஏன் "இன்னும் பா.ஜ.க-வால் குறிவைக்கப்படவில்லை" என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த சில காங்கிரஸ் தலைவர்களின் பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளின் போலித்தனத்தையும் இது அம்பலப்படுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.

Also Read: ”பல்கலை. வேந்தர் பதவி.. பாஜகவிற்கு ஒத்து ஊதும் காங்கிரஸ்” : திமுக துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி கண்டனம்!