Tamilnadu

”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”

கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் கண்ணம்பாளையம் கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி அவரது வீட்டின் அருகே கடந்த 21ம் தேதி விளையாடிக் கொண்டிருந்துள்ளார். வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பெற்றோர் வந்து பார்த்தபோது சிறுமியைக் காணவில்லை. பதறிபோன பெற்றோர் 2 மணிநேரத்திற்கும் மேலாக அந்தப் பகுதியை சுற்றிலும் தேடியுள்ளனர். இருப்பினும் தனது மகளைக் காணவில்லை என அன்றிரவே சூலூர் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து விசாரணையை தொடங்கிய சூலூர் காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். வீட்டிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கண்ணம்பாளையம் குளக்கரையில் ஒரு சிறுமியின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நிகழ்விடத்திற்குச் சென்ற காவலர்கள், சடலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட சிறுமியின் உடல், கடத்தப்பட்டதாகத் தேடப்பட்டு வந்த சிறுமிதான் என்பது உறுதியானது.

இதனால் மிகவும் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சிறுமியின் கொலைக்கு காரணமான கயவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் குற்றவாளிகள் கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில் சாக்லேட் வாங்கித்தருவதாக ஏமாற்றி சிறுமியை கடத்திச் சென்று கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. மிகவும் கொடூரமாக நடைபெற்றுள்ள இந்தச் சம்பவம் கோவை மாவட்ட மக்கள் மட்டுமில்லாது தமிழ்நாடு முழுவதும் பெரும் அச்சத்தை கொடுத்துள்ளது.

புதியதாக தவெக அரசு பொறுப்பேற்றதிலிருந்து தமிழ்நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு தொடர் வன்முறைகள், கொலைகள், பாலியல் குற்றங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது

தனது நேரடிக்கட்டுப்பாட்டில் சட்டம் ஒழுங்கு இருக்கும் என வாய்ச்சவடால் மட்டும் விட்ட முதல்வர் விஜய் அவர்கள், இந்தச் சம்பவத்திற்கு என்ன காரணம் கூறப்போகிறார். தற்போது வரை இதுகுறித்து ஒரு கருத்தும் தெரிவிக்காமல் உள்ள முதல்வருக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது தமிழ்நாட்டில் என்பதை பார்க்கிறாரா, அல்லது ரீல்ஸ் மோகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறாரா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழத் தொடங்கியுள்ளது.

சிறுமி கொலை வழக்கில் விரைவான நடவடிக்கை வேண்டும். குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை பெற்றுத்தந்தும், இந்த கொடூர சம்பவத்திற்கான முழு முதற்காரணம் என்ன என்ற நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்பதே சிறுமியின் பெற்றோரும் மக்களும் வைக்கும் கோரிக்கையாக இருக்கிறது.

Also Read: வேலியே பயிரை மேய்வதா? : விசாரணை என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட காவல் உதவி ஆய்வாளர்!