Tamilnadu

“இன்று மகளிரின் நம்பிக்கையாக திகழும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” : முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்!

'பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது' என நேற்று முதலமைச்சர் விஜய் அறிக்கை வெளியிட்டதை அடுத்து கடும் எதிர்ப்புகள் எழுந்தது.

இந்த எதிர்ப்புகளை அடுத்து இன்று கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பயனாளர்களின் வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், இன்று தமிழ்நாட்டு மகளிரின் நம்பிக்கையாக திகழ்கிறது என முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "மக்களின் வாழ்வாதாரத்தையும், பெண்களின் உரிமையையும் பாதுகாக்க உருவாக்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், இன்று தமிழ்நாட்டு மகளிரின் நம்பிக்கையாக திகழ்கிறது. குடும்பத்தின் பொருளாதாரச் சுமையை குறைத்து, பெண்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் இந்தத் திட்டம், சாதாரண உதவித் தொகை அல்ல; இது திராவிட மாடல் ஆட்சியின் சமூகநீதிக் கொள்கையின் அடையாளம்.

ஆனால் தற்போது ஆளும் தவெக அரசு பல்வேறு காரணங்களை முன்வைத்து, மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகையை வழங்குவதில் கால அவகாசம் கேட்டு மக்களை ஏமாற்ற முயன்றது. பெண்களின் அன்றாட வாழ்க்கைச் சிரமங்களையும், அவர்களின் நம்பிக்கையையும் புரிந்துகொள்ளாமல் செயல்பட்ட இந்த அணுகுமுறை பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மக்களின் உணர்வுகளை உணர்ந்த நம் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வலுவான கண்டனத்தையும், உறுதியான குரலையும் வெளிப்படுத்தினார். மகளிரின் உரிமையை எந்த காரணத்திற்காகவும் தாமதப்படுத்த முடியாது என்று தெளிவாகக் கூறி, மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தார். எதிர்க்கட்சித் தலைவர்

உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தினார். அதன் விளைவாக, மே மாதத்திற்கான 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை மீண்டும் மக்களுக்கு கிடைக்கச் செய்தார்.

இதுவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் தனித்துவம். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து, அவர்களின் நலனுக்காக போராடும் இயக்கமே திமுக. மக்கள் நலனே முதன்மை என்ற கொள்கையுடன், பெண்களின் முன்னேற்றம், சமூகநீதி மற்றும் சமத்துவத்திற்காக என்றும் துணைநிற்கும் இயக்கம் நம் திராவிட முன்னேற்றக் கழகம்” என தெரிவித்துள்ளார்.

Also Read: ரூ.1000 வரவு வைத்தது தவெக அரசு : முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொண்டு வந்தே திட்டங்களே நிலைத்து நிற்கும்!