Tamilnadu

அரசின் அனுமதி வாங்கி தருவதாக பண மோசடி.. தவெக பிரமுகர் அதிரடி கைது!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கீழகல்குறிச்சியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் நிதி நிறுவனம் தொடங்க திட்டமிட்டு, அதற்கான அரசின் அனுமதி பெற முயற்சி செய்து வந்தார். அப்போது, வெண்டலிகோடு பகுதியை சேர்ந்த ஜெகதீஷ், “அரசின் அனுமதி பெற்று தருகிறேன்” என்று கூறி ரூ.2 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரவிக்குமார், ஜெகதீஷிடம் ரூ.1.75 லட்சம் வழங்கியுள்ளார்.

ஆனால், பணத்தை பெற்றுக்கொண்ட ஜெகதீஷ், நிதி நிறுவனம் நடத்துவதற்கான அனுமதி பெற்று தராமல், பணத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ரவிக்குமார், இதுகுறித்து தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும், தலைமறைவாக இருந்த ஜெகதீஷை தேடி வந்த போலீசார், இன்று அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெகதீஷ், தமிழக வெற்றி கழக பிரமுகராக இருந்து வருவதாக கூறப்படுகிறது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: “லிஃப்ட்” தருவதாக கூறி 40 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு... திருவள்ளூரில் நடந்த பகீர் சம்பவம்!