Tamilnadu

“லிஃப்ட்” தருவதாக கூறி 40 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு... திருவள்ளூரில் நடந்த பகீர் சம்பவம்!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே, நேற்று இரவு பணி முடித்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்ற 40 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு சுமார் 9 மணி அளவில், ஆமூர் ஏரிக்கரை சாலையில் நடந்து சென்ற அந்த பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் “வீட்டிற்கு அழைத்து சென்று விடுகிறேன்” என்று கூறியுள்ளார். அவ்வழியாக செல்லும் நபர் தானே என நம்பிய அந்த பெண், அவரது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது ஏரிக்கரை கோவில் அருகே சென்றபோது, அந்த இளைஞர் திடீரென வாகனத்தை நிறுத்தி, கத்தியை காட்டி பெண்ணிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இருள் சூழ்ந்த பகுதி என்பதாலும், பெண் தனது வீட்டிற்கு செல்ல மேலும் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. பெண் கூச்சலிட்ட நிலையில், அந்த இளைஞர் அவரது காது உள்ளிட்ட பகுதிகளில் கடித்தும், அருகில் கிடைத்த கட்டையால் முதுகில் அடித்தும், கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பெண் அங்கும் இங்கும் ஓடி உதவி கோரிய நிலையில், அவ்வழியாக மற்றொரு இருசக்கர வாகனம் வந்ததை கண்டு, அந்த இளைஞர் தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்ற அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு காவல்துறைக்கு தகவல் அளித்தார். அதன் அடிப்படையில், பொன்னேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை பெற ஏற்பாடு செய்ததுடன், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சைனவரம் பகுதியில் இருந்து ஆமூருக்கு செல்ல சுமார் 3 கிலோமீட்டர் தூரம் ஏரிக்கரையை ஒட்டிய சாலை மட்டுமே இருப்பதால், அப்பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதாகவும், இதுபோன்ற அசம்பாவிதங்கள் பெண்களுக்கு அடிக்கடி நடைபெறுவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

சைனவரம், மாதவரம், தச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள், அந்த கிராமங்களுக்கு செல்ல நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய சூழல் இருப்பதால், இதை பயன்படுத்தி சிலர் பெண்களுக்கு எதிராக பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், அப்பகுதியில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும், காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. மேலும், “தவெக அரசு அறிவித்த சிங்கப்பெண்கள் பாதுகாப்புத் திட்டம் எங்கே?” என திருவள்ளூர் மாவட்ட பெண்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.