Tamilnadu

“இந்த Change-க்கு பின்னால் பெரிய Exchange இருக்கிறதோ?” : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க எந்தவொரு கட்சிக்கும் 118 இடங்கள் என்ற பெரும்பான்மை கிடைக்காததால், 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த த.வெ.க.வுக்குப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகள் விழுந்தன. எதிர்க்கட்சியான தி.மு.க. இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தது.

இதற்கு முன்பு நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தீர்மானத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ”த.வெ.க ஆட்சி அமைக்க வேண்டும் எனப் பெரும்பான்மையான மக்கள் ஆதரவு அளிக்கவில்லை. 65% மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிதான் த.வெ.க.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன்தான் த.வெ.க. ஆட்சி அமைத்துள்ளது. குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே, அவர்கள் உங்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்துள்ளார்கள். இப்போதும் நாங்கள் தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

புதுமையான ஆட்சி என்று சொல்கிறார்கள். ஆனால், இன்றைக்கு 'புஷ்பா' திரைப்படப் பாணியில்தான் புதிய அரசின் ஆட்சி நடக்கிறது. அ.தி.மு.க.வை ஊழல் சக்தி என்று தேர்தல் நேரத்தில் சொன்னீர்கள். தற்போது அந்த ஊழல் சக்தியுடன்தான் நீங்கள் சேர்ந்துள்ளீர்கள். இதுதான் உங்கள் ஊழலை அகற்றும் லட்சணமா?" என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

கூவத்தூரையே மிஞ்சும் அளவிற்கு நீங்கள் அடிக்கிற கூத்தைப் பார்க்கும்போது, இந்த அரசு எத்தனை நாட்களுக்கு நீடிக்கப்போகிறதோ என்ற ஐயம் மக்களுக்கு வரத்தொடங்கிவிட்டது. எம்.எல்.ஏ.க்களைக் கடன் பெற்று ஆட்சி நடத்துகிற முதலமைச்சர், தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது எனத் தெரிந்த உடனே, தி.மு.க. அரசு வளர்ச்சிக்காகப் பெற்ற கடன் குறித்துத் தவறான தகவல்களைக் கொடுத்து மக்களைத் திசைதிருப்பப் பார்க்கிறார்.

பெரும்பான்மையும் இல்லாத, அரசியலில் அடிப்படை நேர்மையும் இல்லாத இந்த அரசு நல்லாட்சி தரும், மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் என்ற நம்பிக்கை மக்களுக்குத் துளிகூட இல்லை. திராவிட மாடல் ஆட்சியில், எங்கள் தலைவர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பார்த்துப் பார்த்துத் திட்டங்களை வழங்கினார். அந்தத் திட்டங்களைப் புதிய அரசு தொடர வேண்டும்.

இந்த மாதம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்குமா? என்று 1.35 கோடி மகளிர் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதேபோல் 'புதுமைப் பெண்', 'தமிழ்ப் புதல்வன்' திட்டங்கள் மூலம் பயனடைந்த கல்லூரி மாணவர்களும் தங்களுக்கு இந்த மாதம் ரூ.1,000 வருமா என்று காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களைக் காக்கவைத்துவிடாதீர்கள்; இத்திட்டங்களில் நீங்கள் அரசியல் செய்யக் கூடாது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி0.7% தான் இருந்தது. அப்போதிலும்கூட எங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிருக்கு 'விடியல் பயணத் திட்டம்', ரூ.4,000 கொரோனா நிவாரண நிதி என ஒரே நாளில் ஐந்து முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டார். இப்படி நாங்கள் கடுமையாக உழைத்ததால்தான் இந்தியாவிலேயே இன்று தமிழ்நாடு முதன்மை இடத்தில் இருக்கிறது.

இன்ஸ்டாகிராமில் Reels ஆட்சியாக இல்லாமல்,Real ஆட்சியை நடத்துங்கள். இதுதான் மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.” என தெரிவித்துள்ளார்.