Tamilnadu

“பேரவையின் மாண்புகளையும் காத்திட வேண்டும்” : பேரவை தலைவர், துணைத் தலைவருக்கு தி.மு.க தலைவைர் வாழ்த்து!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய உறுப்பினர்கள் அனைவரும் நேற்று சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகர் அவர்களும், துணைச் சபாநாயகராக எம். ரவிசங்கர் அவர்களும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சட்டப்பேரவை மரபுப்படி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும், அவை முன்னவர் கே.ஏ. செங்கோட்டையன் அவர்களும் இணைந்து, சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.சி.டி. பிரபாகர் அவர்களைச் சபாநாயகர் இருக்கைக்கு அழைத்துச் சென்று அமரவைத்தனர்.

இந்நிலையில் பேரவை தலைவருக்கும், துணைத் தலைவருக்கும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.சி.டி. பிரபாகர் அவர்களுக்கும், பேரவைத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரவிசங்கர் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

மிகப் பெரும் ஆளுமைகளால் பெருமை பெற்ற பொறுப்பில் அமர்ந்துள்ள இருவரும், அந்த மரபினையும், பேரவையின் மாண்புகளையும் காத்திட வேண்டும். ஆளும்கட்சியாக இருக்கும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட, சட்டமன்றத்தில் மற்ற கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைதான் அதிகம். அதுதான் இந்த முறை மக்களின் தீர்ப்பு!

அதை மதித்து, எதிர்க்கட்சிகளின் குரல் சட்டமன்றத்தில் அதிகம் ஒலிப்பதை உறுதிசெய்யும் வகையில் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரும் அவையை வழிநடத்துவார்கள் என நம்புகிறேன்" தெரிவித்துள்ளார்.

Also Read: “திமுக என்றுமே ஒரு ஆக்க சக்தியாகவே திகழும்”: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!