Tamilnadu

ரவுடிபோல் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய த.வெ.க MLA : பொதுமக்கள் அதிர்ச்சி!

"வன்முறை கலாச்சாரத்தை ஒழிப்பேன், மக்களுக்குப் பாதுகாவலராக இருப்பேன்" என உறுதியளித்து வெற்றி பெற்ற விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தினர், தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

சென்னை ராயபுரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் விஜய் தாமு, தனது பிறந்தநாளை முன்னிட்டு இரண்டரை அடி நீளமுள்ள வாளைக் கொண்டு கேக் வெட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடங்களில் பயங்கர ஆயுதங்களை ஏந்தி கேக் வெட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஏற்கனவே எச்சரித்திருந்தது. இதற்கு முன்னதாக, இது போன்ற செயல்களில் ஈடுபட்ட ரவுடிகள் மற்றும் ரீல்ஸ் மோகத்தில் இருந்த இளைஞர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தண்டனை வழங்கியுள்ளனர்.

இவற்றைச் சிறிதும் பொருட்படுத்தாமல், வெற்றி பெற்ற இரண்டாவது நாளிலேயே ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் இத்தகைய அத்துமீறலில் ஈடுபட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டி பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்குவோம் எனக் கூறி ஓட்டு கேட்ட கட்சியின் வேட்பாளரே, சட்டத்தை மதிக்காமல் இவ்வாறு செயல்பட்டது வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் செயலில் ஈடுபட்ட தவெக சட்டமன்ற உறுப்பினர் விஜய் தாமு மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: “தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன குறை வைத்தார் திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின்?” : முரசொலி தலையங்கம்!