Tamilnadu
”சூடான வெப்பத்திற்கு இடையே வந்த மழை அறிவிப்பு.. எப்போது தொடங்கும் தென்மேற்கு பருவமழை” : முழு விவரம்!
இந்தியாவில் வருடம் வருடம் கோடை வெப்பமானது அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்தவருடம் மார்ச் இறுதியில் தொடங்கிய வெயில் ஏப்ரல் இறுதியின்போது உச்சத்தை தொட்டு மக்களின் உஷ்ணத்தை ஏற்றி வருகிறது. அதேபோல் மே மாத அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே தென்மேற்கு பருவமழை குறித்த அறிவிப்பும் வந்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள மே மாதத்திற்கான அறிவிப்பின்படி, இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட முன்கூட்டியே தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மே மாதம் இரண்டாவது வாரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, பொதுவாக ஜூன் மாதம் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு முன்கூட்டியே மே இரண்டாவது வாரத்திலேயே தொடங்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, மே இரண்டாம் வாரத்தில் (மே 7 முதல் 13 வரை) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் எனவும் தமிழகத்தில் மே மாதத்தில் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதால், விளைநிலங்களில் மழை நீர் தேங்குவதைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக உளுந்து, பச்சைப்பயறு, கரும்பு மற்றும் காய்கறித் தோட்டங்களில் முறையான வடிகால் வசதிகளை ஏற்படுத்திக்கொள்ளுமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை மே மாதத்தில் 'வெப்ப அலை' (Heat Wave) வீசுவதற்கான நேரடி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இருப்பினும், மே 7 முதல் 13 வரையிலான காலகட்டத்தில் தமிழக கடலோரப் பகுதிகளில் இரவு நேர வெப்பநிலை இயல்பை விட 1.6°C முதல் 3.0°C வரை உயர்ந்து காணப்படலாம். மேலும், மாநிலத்தின் பல பகுதிகளில் வெப்பம் மற்றும் ஈரப்பதம் கலந்த அசௌகரியமான சூழல் நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வெப்ப அலை எச்சரிக்கை இல்லை என்றாலும், மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா பகுதி மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“மே 4ஆம் தேதி உழைப்பிற்கான பலன் கிடைக்கும்... நல்லாட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
”தமிழ்நாட்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி.. சிகரத்துக்கு மகுடம்” : முரசொலி தலையங்கம்!
-
தொழிலாளர்களின் உண்மைத் தோழனாக திமுக என்றென்றும் திகழ்ந்திடும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே நாள் வாழ்த்து
-
“ரயில்வே துறையை ஒழித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசு!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
5 மாநில தேர்தல் : ஆட்சியை பிடிக்கப்போவது யார்? : வெளியான Exit Polls முடிவுகள்!