Tamilnadu
பெரியார் மண்ணில் அ.தி.மு.க இப்படி பா.ஜ.க-வுடன் கைகோர்த்து நிற்கலாமா? : பழனிசாமிக்கு டி.ராஜா கேள்வி!
சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திமுக வேட்பாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து, இராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா வாகனத்தில் நின்றபடி வாக்குச் சேகரித்தார்.
அப்போது டி.ராஜா பேசியது வருமாறு:-
பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ஏதேதோ சொல்கிறார்கள், ஆனால் அவர்கள் நாட்டை மதவாத நாடாக்க நினைக்கிறார்கள். அனைத்துத் தரப்பு மக்களும் மதநல்லிணக்கத்தோடு வாழும் இந்தப் பகுதியைச் சிதைக்கப் பார்க்கிறார்கள்.
இன்று மகாத்மா காந்தி உயிரோடு இருந்தால், 'கடவுளே.. மோடி, அமித்ஷா மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடு' என்றுதான் வேண்டிக்கொள்வார்.
'இந்தியா இந்துத்துவா நாடாக மாறினால் அதைவிடப் பெரிய பேரிடர் வேறில்லை' என்றார் அண்ணல் அம்பேத்கர். இன்று அந்தப் பேரிடரைத் தான் நாம் எதிர்கொண்டுள்ளோம். அதை முறியடிக்கத் தமிழ்நாடு முன்னணியில் இருந்து வழிகாட்ட வேண்டும்.
இங்கு 'டபுள் இன்ஜின்' ஆட்சி வேண்டும் என்கிறார் மோடி. நீங்கள் ஆளும் உத்தரப் பிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்று பாருங்கள்? ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு என்றார்கள், இதுவரை 20 கோடி வேலைகள் உருவானதா? 15 லட்சம் தருவோம் என்றார்களே, யாருக்காவது வந்ததா?.
மோடி அரசு அதானி, அம்பானிகளுக்கான அரசு. பாமர மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் எதிரான இந்த மக்கள் விரோத அரசாங்கத்திற்கு, தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக துணை போகிறது. பெரியார் மண்ணில் அதிமுக இப்படி பாஜகவுடன் கைகோர்த்து நிற்கலாமா? இந்த மக்கள் விரோதக் கூட்டணிக்கு மக்கள் நல்ல தீர்ப்பினை வழங்க வேண்டும்.
இவ்வாறு டி.ராஜா பேசினார்.
Also Read
-
#Delimitation இந்தியாவின் தென் முனையில் இருந்து உரிமைக் குரல் எழுப்புவோம் : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
செய்தியாளர் மீது தாக்குதல் : ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளரின் செயலால் பரபரப்பு!
-
தொகுதி மறுவரையறை : தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி எச்சரிக்கை!
-
மகளிர் இடஒதுக்கீட்டுடன், தொகுதி மறுவரையறை... பாஜகவின் பகிரங்க திட்டத்தை அம்பலப்படுத்திய முதலமைச்சர்!
-
”மகளிர் இட ஒதுக்கீடு.. தொகுதி மறுவரையறை.. தென் மாநில தயவு தேவையில்லை என்ற எண்ணம்” : முரசொலி விமர்சனம்!