Tamilnadu

51-ஆ அல்லது 52-ஆ? : சொந்த வயதைக் கூட சரியாகக் குறிப்பிடாத விஜய்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துவிட்டு, தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் தேர்தலில் நடிகர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் அந்தந்தத் தேர்தல் அதிகாரிகளிடம் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளார்.

முதலில் பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது தந்தை, தாய், மனைவி, மகன் மற்றும் மகளுக்குத் தான் கடன் வழங்கியுள்ளதாக விஜய் குறிப்பிட்டிருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தற்போது திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் தனது வயது 51 எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், முன்னதாக பெரம்பூரில் தாக்கல் செய்த மனுவில் தனது வயது 52 எனக் குறிப்பிட்டிருந்தார்.

"தனது சொந்த வயதைக் கூடத் துல்லியமாகக் குறிப்பிடத் தெரியாதா?" எனப் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். வயது மட்டுமல்லாது, குற்ற வழக்குகள் குறித்த தகவல்களிலும் முரண்பாடுகள் உள்ளன.

பெரம்பூர் தொகுதி வேட்புமனுவில் தன் மீது "எந்தக் குற்ற வழக்குகளும் இல்லை" எனக் குறிப்பிட்டிருந்த விஜய், திருச்சி கிழக்கு தொகுதி மனுவில் "இரண்டு வழக்குகள் உள்ளன" என்று தெரிவித்துள்ளார்.

ஒரே வேட்பாளர் தனது வயது மற்றும் வழக்கு விவரங்களை வெவ்வேறு மனுக்களில் மாறுபட்டுக் குறிப்பிட்டிருப்பது விவாதப் பொருளாகியுள்ளது. தகவல்கள் முரண்படுவதால் விஜய்யின் வேட்புமனு நிராகரிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Also Read: 2026 தேர்தல் : திமுக கூட்டணியில் களமிறங்கும் 28 பேர்.. காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் விவரம் உள்ளே!