Tamilnadu

“மீண்டும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் களம் காண்கிறேன்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் உள்ள 824 சட்டமன்றத் தொகுதிகளில் ஏப்ரல் மாதத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மொத்தமுள்ள 824 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்களிக்க 17.4 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ள நிலையில், 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. சுமார் 25 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளில் வாக்களிக்க 5.67 கோடி வாக்காளர்கள் தகுதிபெற்றுள்ள நிலையில், அதில் 2.89 கோடி பெண்கள், 2.77 கோடி ஆண்கள் மற்றும் 7,617 மூன்றாம் பாலினத்தவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் மொத்தம் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, ஏப்.23 அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. நகர் பகுதிகளில் 30,967 வாக்குச்சாவடிகளும், கிராமப்புறங்களில் 44,065 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட இருக்கிறது.

இந்நிலையில், தேர்தலில் போட்டியிட விரும்புவோர் மார்ச் 30 முதல் ஏப்.6 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, தொகுதி வாரியாக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களும், பிற வேட்பாளர்களுக்கும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

அவ்வகையில், இன்று (ஏப்.2) கழக நிர்வாகிகள் - தொண்டர்கள் - கூட்டணி கட்சினருடன் ஊர்வலமாகச் சென்று டாக்டர்.பெசன்ட் சாலையில் அமைந்துள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் (RO) அலுவலகத்தில் தி.மு.கழக இளைஞர் அணிச் செயலாளர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் இரண்டாம் முறையாகப் போட்டியிடுவதற்கு கழகத் தலைவர் முதலமைச்சர்

மு.க.ஸ்டாலின் அவர்களால் வாய்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, டாக்டர்.பெசன்ட் சாலையில் அமைந்துள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் (RO) அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தோம்.

கடந்த முறை அவர்களுள் ஒருவனாக என்னை அள்ளி அரவணைத்து வெற்றி பெற வைத்தது போலவே இம்முறையும் என்னை பேரன்புடன் ஏற்று ஆதரவளிப்பார்கள் என்ற உறுதியுடன் மீண்டும் நம் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் களம் காண்கிறேன்!

அமையவிருக்கும் திராவிட மாடல் 2.0-வில் இன்னும் பல வளர்ச்சித் திட்டங்களைத் தொகுதி மக்களுக்குக் கொண்டுசேர்க்க, அயராது உழைப்போம்! வெல்வோம் ஒன்றாக!” என பதிவிட்டுள்ளார்.

Also Read: 14 ஆண்டுகால துயரம் : சிறுமிக்கு வாழ்க்கை கொடுத்த ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை - முதலமைச்சர் பாராட்டு!