Tamilnadu

“தி.மு.க கூட்டணி மீண்டும் அரியணை ஏறும்” : Poll Tracker வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவு!

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும், அ.தி.மு.க.விற்கும் இடையே கடும் போட்டி நிலவி வரும் சூழலில், பல்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தி.மு.க. தலைமையிலான 'மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி'யே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளன.

நேற்று வெளியான 'லோக்போல்' அமைப்பின் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, தி.மு.க. கூட்டணி 40.1 சதவீத வாக்குகளைப் பெற்று, 181 முதல் 189 தொகுதிகள் வரை கைப்பற்றும் எனத் தெரியவந்துள்ளது. இதன் மூலம் தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் 'போல் டிராக்கர்' வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், தி.மு.க. கூட்டணி 42.7% வாக்கு விகிதத்துடன் 172 முதல் 178 இடங்களை வென்று மீண்டும் அரியணை ஏறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தக் கருத்துக்கணிப்புகளில் மற்றுமொரு முக்கிய அம்சமாக, எடப்பாடி பழனிசாமி மற்றும் விஜய் ஆகியோருடன் ஒப்பிடும்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்கத் தலைவராகத் திகழ்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி கூறிவரும் 'திராவிட மாடல் 2.0' ஆட்சி அமைவது உறுதி என்பதை இக்கருத்துக்கணிப்பு முடிவுகள் மெய்ப்பிப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Also Read: “மீண்டும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் களம் காண்கிறேன்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!