Tamilnadu

”அரசியலின் அரிச்சுவடு தெரியாதவர் விஜய்” : கி.வீரமணி விமர்சனம்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரப்புரைக்கு தி.மு.க. தடை விதிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து, திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி "விஜய் அரசியலின் அரிச்சுவடே தெரியாமல் பேசுகிறார். அரசியல் தெளிவு உள்ளவர்களுக்கும், அரசியலில் எம்.ஏ. படித்தவர்களுக்கும் பதில் சொல்லிதான் எனக்குப் பழக்கம். ஆனால், அடிப்படை அரிச்சுவடியே தெரியாத ஒருவருக்குப் பதில் சொல்வதில் எந்தப் பயனும் இல்லை. நான் அவரை ஒரு அரசியல்வாதியாகப் பார்க்கவில்லை; இன்னும் ஒரு நடிகராகவே பார்க்கிறேன்.

நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, மே 5-ஆம் தேதி மீண்டும் கோட்டைக்குச் செல்லப்போவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். இது ஆருடமோ, ஜோசியமோ அல்ல; மக்கள் மன்றத்தில் எழுதப்பட்ட தீர்க்கமான முடிவு.

முதல் தேர்தலில் இருந்து இன்றைய தேர்தல் வரை அனைத்தையும் உற்று கவனிக்கும் வாய்ப்பைப் பெற்றவன் நான். ஒவ்வொரு தேர்தலும் எப்படி நடக்கும், மக்கள் எத்தகைய முடிவை எடுப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வின் வெற்றிக்கு ஏற்கனவே சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டுவிட்டது. அதில் நடந்து செல்வது மட்டும்தான் பாக்கியுள்ளது. தி.மு.க-வின் வெற்றி உறுதி” என தெரிவித்துள்ளார்.

மேலும், தங்கள் கூட்டணிதான் 'மெகா கூட்டணி' என்றும், தாங்களே வெற்றி பெறுவோம் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறி வருவது குறித்த கேள்விக்கு, "ஏற்கனவே பத்து முறை இதையேதான் சொன்னார். தற்போது 11-வது முறையாகக் கூறி வருகிறார்" என்று கி.வீரமணி விமர்சித்துள்ளார்.

Also Read: திட்டமிட்டு அவதூறு பரப்பும் விஜய்? ஆதாரங்களுடன் அம்பலம்.. தேர்தலை எதிர்கொள்ளத் திணருகிறதா விஜய் கட்சி!