Tamilnadu

தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்! : த.வெ.க மாவட்டச் செயலாளர் பார்த்திபன் மீது வழக்குப்பதிவு!

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் (Model Code of Conduct) அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் 24 மணிநேரமும் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறி இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பொது மக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கியதாக த.வெ.க சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் பார்த்திபன் மீது காணொளி, புகைப்படங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியான செய்திகளுடன் கூடிய ஆதாரங்களுடன் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்குப் பிறகு, தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் சேலம் அன்னதானப்பட்டி காவல்துறையினர் த.வெ.க மாவட்டச் செயலாளர் பார்த்திபன் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதேபோன்று ரமலான் அன்று த.வெ.க.வின் சின்னம் மற்றும் கொடிகளுடன் மசூதியின் முன்பு குடிநீர் பாட்டில் விநியோகித்ததாக வெளியான புகாரைத் தொடர்ந்து அக்கட்சியின் நிர்வாகிகள் மூன்று பேர் மீது சூரமங்கலம் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: “பதவியைக் காக்க பா.ஜ.க.வின் பாதம் தாங்கியாக மாறியவர்தான் பழனிசாமி!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!