Tamilnadu

சென்னையில் சிக்கிய 10 ஏ.கே 47 துப்பாக்கிகள்... தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை! - முழு விவரம் உள்ளே!

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் (Model Code of Conduct) அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் 24 மணிநேரமும் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் (FST) வீதம், 48 பறக்கும் படைகளும் (FST); தொகுதிக்கு 3 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் (SST) வீதம், 48 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் (SST) அமைக்கப்பட்டு, மூன்று சுழற்சி முறைகளில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை அசோக் நகரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட வந்தபோது, தனியார் வாகனம் ஒன்றில் 10 ஏ.கே 47 ரக துப்பாக்கிகள் கண்டறியப்பட்டது அதிர்ச்சியை உண்டாக்கியது.

அதன் பிறகு வாகன ஓட்டுநரிடம் இது குறித்து விசாரித்தபோது, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி வரும் டிசி (DC) திரைப்படத்தில் பயன்படுத்துவதற்காக 10 ஏ.கே 47 டம்மி துப்பாக்கிகளை வடபழனியில் இருந்து சினிமா ஷூட்டிங்கிற்கு கொண்டு சென்றதாகவும், பின்னர் பயன்படுத்திவிட்டு அந்த துப்பாக்கிகளை மீண்டும் வடபழனிக்கு கொண்டு சென்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் டம்மி துப்பாக்கிகளுக்கான லைசன்ஸையும் ஓட்டுநர் காண்பித்ததால் தேர்தல் பறக்கும் படையினர், அதனை சரி பார்த்து வாகனத்தை அனுப்பி வைத்தனர்.

Also Read: தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்! : த.வெ.க மாவட்டச் செயலாளர் பார்த்திபன் மீது வழக்குப்பதிவு!