Tamilnadu

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வழக்கு... குற்றவாளிகளுக்கு வாழ்நாள் சிறை... மகளிர் நீதிமன்றம் அதிரடி!

கோவை சர்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி இரவு 21 வயது கல்லூரி மாணவி, ஒண்டிப்புதூரைச் சேர்ந்த 25 வயது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார். அப்போது, ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள், ஆண் நண்பரை அரிவாளால் தாக்கி விட்டு, மாணவியை அங்கு இருந்து கடத்தி சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இதுதொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சிவகங்கையை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான சதீஷ் என்ற கருப்பசாமி (30), காளி என்ற காளீஸ்வரன் (21), அவர்களது உறவினரான மதுரையைச் சேர்ந்த குணா என்ற தவசி (20) ஆகியோரை போலீசார் கோவை, துடியலூர் அருகே கீரணத்தம் பகுதியில் பகுதியில் பதுங்கி இருந்த போது சுட்டுப் பிடித்தனர்.

இதனை தொடர்ந்து ஒரு மாதத்துக்கு உள்ளாகவே இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த வழக்கு கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் இருந்து கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

கோவை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தரராஜன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 270 பக்கங்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன.

சாட்சிகள் விசாரணை கடந்த மாதம் இரண்டாம் தேதி தொடங்கியது, கல்லூரி மாணவி, மாணவியின் ஆண் நண்பர், மாணவியின் தாய், காவல்துறை அதிகாரிகள் உட்பட பலரும் சாட்சியம் அளித்தனர்.

21 நாட்களில் சாட்சிகள் விசாரணை முடிவு அடைந்தது. இந்த வழக்கு இன்று (மார்ச் 07) கோவை மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருமே குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது. மேலும் குற்றவாளிகள் மூவருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்து உத்தரவிட்டு உள்ளார்.