Tamilnadu

“பா.ஜ.க தொட்டதெல்லாம் பஸ்பமாகிவிடும்; அ.தி.மு.க?” : ப.சிதம்பரம் கடும் விமர்சனம்!

”பா.ஜ.க தொட்டதெல்லாம் பஸ்பமாகிவிடும். தற்போது அதிமுகவை அவர்கள் தொட்டுள்ளார்கள். அடுத்து வரும் 5 ஆண்டுகளில் அ.தி.மு.க என்ற ஒரு கட்சியே தமிழ்நாட்டில் காணாமல் போய்விடும்." என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ப.சிதம்பரம்,"தமிழ், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கு இணையாக, நரேந்திர மோடி அரசு இந்தியைத் திணிக்கும் வகையில் புதிய முறையைக் கையாண்டுள்ளது. அதாவது, இந்திப் பெயர்களை அப்படியே ஆங்கில எழுத்துகளில் எழுதத் தொடங்கியுள்ளது.

மொழியைப் பொறுத்தவரை, இந்தி தெரிந்தவர்களுக்கு ஆங்கிலம் வாசிக்கத் தெரியாது; அதேபோல், ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு இந்திச் சொற்களின் பொருள் புரியாது. இத்தகைய குழப்பமான ஒரு மொழி நடையைத்தான் நரேந்திர மோடி அரசு தற்போது உருவாக்கியுள்ளது.

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துவிட்டால், தமிழ் மொழி அழிந்துவிடும் என்பதற்கு இதுவே ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டாகும். ஒரு மொழி வாழ வேண்டுமென்றால் அது பேச்சுமொழி, எழுத்துமொழி மற்றும் ஆட்சி மொழியாக இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.

பிரதமர் நரேந்திர மோடியின் திட்டம் என்பது 'ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கட்சி, ஒரே தேர்தல்' என்ற நோக்கில் மக்களை வஞ்சிப்பதாகவே அமைந்துள்ளது. பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள், இந்தியாவை ஒரு இந்துத்துவ நாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்கிலேயே நீண்டகாலமாகச் செயல்பட்டு வருகின்றன.

இதற்காக அவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இவற்றை நாம் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் கையாள வேண்டும். இதன் காரணமாக, அதிமுக கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தோற்கடிக்கப்பட வேண்டும்.

பா.ஜ.க தொட்டதெல்லாம் பஸ்பமாகிவிடும். தற்போது அதிமுகவை அவர்கள் தொட்டுள்ளார்கள். அடுத்து வரும் 5 ஆண்டுகளில் அ.தி.மு.க என்ற ஒரு கட்சியே தமிழ்நாட்டில் காணாமல் போய்விடும்.

ஒவ்வொரு முறையும் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்திற்குள் நுழைய முடியாத அளவிற்கு நாம் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.

வரவிருக்கும் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மாபெரும் கூட்டணி நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் அதிமுக கட்சியானது அமித்ஷாவின் பிடியில் சிக்கியுள்ளது.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில், அதிமுக தனது தொண்டர்களையும் நிர்வாகிகளையும் பாரதிய ஜனதா கட்சியிடம் அடகு வைத்துவிட்டது.

ஆனால், தமிழ்நாட்டு மக்களைக் காக்கும் நோக்கில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியினர் வீடு வீடாகச் சென்று தங்கள் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளனர்.

இன்னும் சில நாட்களில் தேர்தல் முடிந்து, மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் தமிழக முதல்வராக திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை அமர வைத்து, தமிழ் மொழியைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது" என தெரிவித்துள்ளார்.

Also Read: 5 ஆண்டுகாலம் கருணை மிகு அரசு - கருணையின் வடிவம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : முரசொலி புகழாரம்!