Tamilnadu

“தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நம் தாய்மொழியின் அவசியத்தை உணர்த்தும் வகையிலும், தாய்மொழிக்காக இன்னுயிர் நீத்தவர்களை நினைவுகூரும் வகையிலும் இன்று உலகத் தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலகத் தாய்மொழி நாளையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

”தமிழே நீ வாழ்ந்திடு!

இன்று உலகத் தாய்மொழிகள் நாள்! ஏராளமானோர் உயிர்கொடுத்துக் காத்த நம் உயிர்நிகர் தமிழ்மொழியை எத்தனை சிறப்புகள் சொல்லி அழைத்தாலும் “தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது. தலைவர் கலைஞரின் இந்த வரிகளைப் பாடலாக்கிய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு என் நன்றி!

நம் தமிழைக் காத்து - அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்த்து, செழிப்போடு வாழவைக்க வேண்டியது உலகெங்கும் வாழும் அனைத்துத் தமிழர்களின் பொறுப்பு" என தெரிவித்துள்ளார்.

அதேபோல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”நம் அனைவரின் உயிரோடும் உணர்வோடும் கலந்த, நம் தாய்மொழி தமிழைப் போற்றி மகிழ்வோம்.எந்த வடிவில் மொழித் திணிப்பு வந்தாலும், கழகத் தலைவர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒன்றிணைந்து வீழ்த்துவோம்!” என தெரிவித்துள்ளார்.

Also Read: 654 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் : மாணவர்களுக்கு AI பயிற்சி!