Tamilnadu

“அச்சுறுத்தல்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பயப்பட மாட்டார்” : கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!

அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் தேர்தல் பணியைப் பார்த்துப் பொறாமைப்பட்டு பொய் வழக்கு! பொய் வழக்கைச் சட்டரீதியாக எதிர்கொண்டு திமுக முறியடிக்கும் என கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் ஆர்.எஸ்.பாரதி,"அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் மீது சிபிஐ விசாரணை நடந்துகொண்டிருந்த போது, அமலாக்கத்துறை சில ஆவணங்களை எடுத்ததாகச் சொல்கிறார்கள். இதனைத் தொடர்ந்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள் சிபிஐ வழக்கை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த முக்கிய வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. சிபிஐ வழக்கு ரத்து செய்யப்பட்டதால் அமலாக்கத்துறையிடம் போதிய ஆதாரங்கள் இல்லை என்றாலும் அவர்கள் தமிழ்நாடு அரசை நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கே.என்.நேரு அவர்களைக் கட்சியின் மூத்த தலைவர் என்றோ கழகத்தின் முதன்மைச் செயலாளர் என்றோ கூடப் பார்க்காமல் உடனடியாக லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டார். தற்போது அந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் இன்பதுரை தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசு ஏற்கனவே விசாரணை நடத்திக் கொண்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. இது ஒன்றும் பின்னடைவு அல்ல, திமுகவின் சட்டத்துறை இதனைச் சட்டரீதியாகச் சந்தித்து முறியடிக்கத் தயாராக இருக்கிறது.

அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் மீது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பல வழக்குகளை தொடுத்திருக்கிறார். அத்தனை வழக்குகளையும் எதிர்கொண்டு வென்று காட்டியவர்தான் கழக முதன்மைச் செயலாளர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்:

பாஜக அரசு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தப்படுகிறது. முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களை நள்ளிரவில் கைது செய்து 100 நாட்கள் சிறையில் வைத்தும், மூன்று ஆண்டுகள் ஆகியும் அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. கடந்த 2016-ல் லாரிகளில் பிடிபட்ட 570 கோடி ரூபாய் வழக்கில் 10 ஆண்டுகள் ஆகியும் சிபிஐ இதுவரை முதல் தகவல் அறிக்கையைக் கூடப் பதிவு செய்யவில்லை. இவை அனைத்தும் தேர்தல் நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவின் இமேஜைக் கெடுப்பதற்காகச் செய்யப்படும் சூழ்ச்சிகள்.

அமைச்சர் கே.என். நேரு தற்போது 41 தொகுதிகளுக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தேர்தல் பணியைப் பார்த்துப் பொறாமைப்பட்டு எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனையின் பேரில் டெல்லியில் இருப்பவர்கள் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். ஆனால் அமைச்சர் அவர்கள் இத்தகைய அச்சுறுத்தல்களுக்குப் பயப்பட மாட்டார்; தட்டத் தட்ட பந்து எழும்புவது போல இன்னும் தீவிரமாகப் பணியாற்றுவார் என்று கழக அமைப்புச் செயலாளர் தெரிவித்தார்.

Also Read: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ள “ததும்பும் தமிழ்ப் பெருமிதம்” நூல்!