Tamilnadu
தஞ்சாவூர் - தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ‘மாபெரும் சோழர் அருங்காட்சியகம்’!: முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 13.2.2026 அன்று தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் அருங்காட்சியகத் துறையால் தஞ்சாவூர் – தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் 56 கோடியே 41 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மாபெரும் சோழர் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
மாபெரும் சோழர் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டுதல் சோழர்களின் மகத்தான பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில், சோழர் காலக் கலைப்பொருட்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை பாதுகாத்து எதிர்காலத் தலைமுறைகளுக்காக காட்சிப்படுத்தும் நோக்கில், 2023–24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பின்படி, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் 50 ஏக்கர் பரப்பளவில், 56 கோடியே 41 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அருங்காட்சியகத் துறையால் அமைக்கப்படவுள்ள மாபெரும் சோழர் அருங்காட்சியகத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
இம்மாபெரும் சோழர் அருங்காட்சியகத்தில், பண்பாடு மற்றும் வரலாற்றுச் சிறப்பு, சங்ககாலச் சோழர்கள், சமயங்களுக்கு அளிக்கப்பட்ட ஆதரவு, நிருவாகமும் ஆட்சிமுறையும், கட்டடக்கலைச் சிறப்பு, நகரமைப்பு, நீர்மேலாண்மை, நில மேலாண்மை, கலை மற்றும் பண்பாடு (சோழர் கால செப்புப் படிமங்கள் மற்றும் கற்சிற்பங்கள்), சமூக வாழ்வு, பொருளாதாரம், இலக்கியம், கடல்கடந்த வாணிபம், வெளிநாட்டுப் படையெடுப்புகள், கடற்படை வலிமை மற்றும் இராணுவத் திறன் ஆகிய தலைப்புகளில் தனித்தனி காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட உள்ளன.
மாபெரும் சோழர் அருங்காட்சியகம், சோழர் கால பண்பாட்டு முக்கியத்துவத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லும் பண்பாட்டு மையமாகவும், கல்வி, ஆய்வு மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான முன்னோடி மையமாகவும் அமைக்கப்படவுள்ளது.
Also Read
-
“சட்டப்பேரவையில் தரம் தாழ்ந்து பேசாதீங்க”... : அமைச்சர் நிர்மல்குமாருக்கு கே.என்.நேரு பதிலடி!
-
த.வெ.க அரசு எந்தத் திசையில் செல்கிறது? : சர்ச்சை சுற்றறிக்கை - தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
வெளியாகும் சுற்றறிக்கை.. திரும்பப்பெறும் தவெக அரசு?.. முதல்வரை மிஞ்சிய சூப்பர் பவர் யார்? : திமுக கேள்வி!
-
“தவெக 100 நாள் ஆட்சி.. 18 சாதனைகள் இல்லை..பதினெட்டும் ஓட்டைகள்” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
“தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தில் உரிய விளக்கத்தைக் கேட்டுப் பெற வேண்டும்!” : உதயநிதி அறிவுறுத்தல்!