Tamilnadu
இனி சென்னை மத்திய கைலாஷில் நெரிசல் இல்லை..! - ரூ.60.68 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் திறப்பு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (15.2.2026) நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் சென்னை – அடையாறில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 60 கோடியே 68 இலட்சம் ரூபாய் செலவில் ராஜீவ் காந்தி சாலை மற்றும் சர்தார் பட்டேல் சாலையை இணைக்கும் மத்திய கைலாஷ் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார்.
மத்திய கைலாஷ் பகுதியில் போக்குவரத்து நெரிசலை களைந்திட புதிய மேம்பாலம் அமைக்கும் பணி
ராஜீவ் காந்தி சாலையானது மத்திய கைலாஷ் பகுதியில் சர்தார் பட்டேல் சாலையிலிருந்து தொடங்குகிறது. இந்த இரண்டு சாலைகளும் சந்திக்கும் இடம் “T” வடிவிலானதாகும். இச்சாலை சந்திப்பில், அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் தொடங்கும் நேரத்திலும் முடிவுறும் நேரத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடனும், காலவிரயத்துடனும் இச்சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
ராஜீவ் காந்தி சாலை மற்றும் சர்தார் பட்டேல் சாலையை இணைக்கும் மத்திய கைலாஷ் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தின் சிறப்பம்சங்கள்
மத்திய கைலாஷ் சந்திப்பில் வாகனங்கள் சிரமமின்றி கடந்து செல்வதற்கு வாகன செறிவுகளின் அடிப்படையில் சர்தார் பட்டேல் சாலையிலிருந்து ராஜீவ் காந்தி சாலைக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் தற்போது அமைக்கப்பட்டுள்ள இருதட ஒருவழிச்சாலை மேம்பாலத்தினை பயன்படுத்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு, கிண்டியிலிருந்து ராஜீவ் காந்தி சாலைக்கு (OMR) செல்லும் வாகனங்கள் அனைத்தும் இப்பாலத்தினை பயன்படுத்தும்போது அடையாறு பகுதியிலிருந்து கிண்டி நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் எவ்வித தங்குதடையின்றி செல்ல வழி ஏற்படும்.
மத்திய கைலாஷ் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சமிக்ஞையும் விலக்கிக் கொள்ளப்படும். மேலும், கிண்டியிலிருந்து அடையாறுக்கும், OMR சாலையிலிருந்து கிண்டிக்கும் செல்லும் வாகனங்கள் இலகுவாக இடதுபுறப் பயணம் (Free left movement) மேற்கொள்ள இயலும்.
இந்த “L” வடிவ இருதட ஒருவழிச்சாலை மேம்பாலம் 60 கோடியே 68 இலட்சம் ரூபாய் செலவில், இருவழித்தடம் அகலம் கொண்டதாகவும், ஒருவழி வாகன போக்குவரத்து கொண்டதாகவும், வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் மொத்த நீளம் அணுகு சாலை உட்பட 652 மீட்டர் ஆகும்.
சர்தார் பட்டேல் சாலையிலிருந்து ராஜீவ் காந்தி சாலைக்கு பிரிந்து செல்லும் இடத்தில் பாலம் வளைவாகவும், இவ்வளைவானது 45 மீட்டர் ஆரம் (Radius) கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளைவுப் பகுதியில் பாலத்தின் அகலம் கூடுதலாக்கப்பட்டதுடன், மணிக்கு 30 கி.மீ வேகத்தில் மட்டுமே பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், கூடுதல் பாதுகாப்புக்காக பாலத்தின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள தடுப்புசுவரின் உயரமும் அதிகரிக்கப்பட்டு, வாகனங்கள் இவ்வளைவில் செல்லும் போது சிரமமின்றி கடந்து செல்லும் வண்ணம் குறுக்குவெட்டு சாய்வுடன் (Super elevation) வடிவமைக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த வளைவுப் பகுதியில் எவ்வித பயமின்றி பொதுமக்கள் பயணிக்கலாம். எனினும், பாலத்தின் மீதான பயணத்திற்கு வேக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வேக கட்டுப்பாட்டிற்கான எச்சரிக்கை பலகைகள் பாலத்தின் தடுப்புச்சுவரில் பொருத்தப்பட்டுள்ளது.
இப்பாலத்தின்மீது பயணிக்கும் வாகனங்கள் இரண்டு வழித்தடங்களிலும் ஒன்றுக்கொன்று இடையூறின்றி பயணிக்க ஏதுவாக பாலத்தின் ஓடுதளத்தில் வழித்தட கோடுகள் (Lane marking) அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் பாதுகாப்பான பயணத்திற்கு தேவையான மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த மேம்பாலம் திறக்கப்படுவதன் மூலம் ராஜீவ் காந்தி சாலை, கிண்டி, அடையாறு, மத்திய கைலாஷ் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, பொதுமக்களின் பயண நேரமும் குறையும்.
Also Read
-
ஈரோட்டில் ‘நொய்யல்’ - இராமநாதபுரத்தில் ‘நாவாய்’ அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல்! : ரூ.68 கோடி ஒதுக்கீடு!
-
ரூ.24.30 கோடியில் ‘கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம்’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
தஞ்சாவூர் - தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ‘மாபெரும் சோழர் அருங்காட்சியகம்’!: முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்!
-
ஒரே தவணையில் ரூ.5 ஆயிரம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை… முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்க திரண்ட பெண்கள்!
-
“தமிழ்நாட்டின் நிரந்தர டிரெண்ட் Black and Red தான் ; 2.0 ஸ்டார்ட்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!