Tamilnadu

ஈரோட்டில் ‘நொய்யல்’ - இராமநாதபுரத்தில் ‘நாவாய்’ அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல்! : ரூ.68 கோடி ஒதுக்கீடு!

ஈரோடு மாவட்டம், கருமாண்டி செல்லிபாளையத்தில் 33.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நொய்யல் அருங்காட்சியகம், இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் 34.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நாவாய் அருங்காட்சியகம் ஆகியவற்றிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

நொய்யல் அருங்காட்சியகம் ஈரோடு மாவட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் 13.3.2024 அன்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், நொய்யல் ஆற்றின் வடகரையில் கொடுமணல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரிய தொல் பொருட்களை அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்திட ஈரோடு மாவட்டத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொல்லியல் துறை மூலம் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.

பதிற்றுப்பத்தில் கொடுமணம் என்றழைக்கப்பட்ட கொடுமணலில் நான்கு கட்டங்களாக நிகழ்ந்த அகழ்வாய்வுகளின் போது, இரும்பால் ஆன ஈட்டி முனைகள், வாள்கள், இரும்பு-எஃகு உருக்காலை, சங்கு வளையல்கள், குறியீடுகள், தமிழி எழுத்துக்களைக் கொண்ட மட்பாண்டங்கள், அரிய கல்மணிகள் செய்யும் தொழிற்சாலை, நூல் நெய்வதற்கான தொழிற்சாலைகள் போன்றவை பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டன.

உரோமப் பேரரசில் புழங்கிய பொன் மற்றும் வெள்ளி நாணயங்கள் சிலவும் கிடைத்தன. மேலும், செப்பால் ஆன புலிச் சின்னமும், இருபுறமும் கல் படிக்கட்டுகளுடன் கூடிய கிணறு ஒன்றும் முக்கிய கண்டுபிடிப்பாக உள்ளது. கங்கைச் சமவெளியைச் சார்ந்த கருப்பு வண்ணம் தீட்டப்பட்ட மட்பாண்டங்கள் வெள்ளி முத்திரை நாணயங்கள், ரௌலெட்டட் மட்பாண்டங்கள் என கொடுமணல் வெளியுலகத்துடன் கொண்டிருந்த வணிக உறவை இவை சுட்டிக் காட்டுகின்றன.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், கருமாண்டி செல்லிபாளையம் ஊரில் 5.98 ஏக்கர் பரப்பளவில் 33.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நொய்யல் அருங்காட்சியகத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் முதலமைச்சர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.

நாவாய் அருங்காட்சியகம் இராமநாதபுரம் மாவட்டம்

2024-2025 ஆம் ஆண்டிற்கான தொல்லியல் துறை மானியக் கோரிக்கையில், இராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளம் தொல்லியல் தளம், வைகை ஆற்றின் கரையில் வங்காளவிரிகுடா கடற்கரைக்கு அண்மையில் அமைந்துள்ளது.

இத்தளத்தில், தொல்லியல் துறை 10 ஆண்டுகள் விரிவான அகழாய்வு மேற்கொண்டது. இந்த அகழாய்வுகளின் முடிவுகள் உரோம நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான வணிகத் தொடர்பினை உறுதி செய்துள்ளன. அழகன்குளத்தில் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை உள்ளடக்கிய புதியதாக அருங்காட்சியகம் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் 34.55 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள நாவாய் அருங்காட்சியகத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.

தமிழ்நாட்டின் பாறை ஓவியங்கள்“ (Rock Art of Tamil Nadu)

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் பேராசிரியர் கா. ராஜன் மற்றும் முனைவர் இரா. சிவானந்தம் ஆகியோர் எழுதிய தமிழ்நாட்டின் பாறை ஓவியங்கள் "Rock Art of Tamil Nadu” என்ற நூலினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் அமைந்துள்ள 46 பாறை ஓவியத் தளங்களில் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆவணப்படுத்தலின் விளைவாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு, தொல்லியலாளர்கள், நாட்டுப்புறவியலாளர்கள், மானுடவியலாளர்கள்.

நிலவியலாளர்கள். கலை வரலாற்றாசிரியர்கள் மற்றும் தொல்பழங்கால சூழலியலாளர்கள் ஆகிய பல்துறை ஆய்வாளர்கள் கொண்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்டது. குழுவினர்கள் சேகரித்த தகவல்களும், விளக்கங்களும் ஒருங்கிணைந்த அறிவுசார் படைப்பாக இந்நூலில் முன்வைக்கப்பட்டுள்ளன.

பாறை ஓவியங்களின் பண்பாட்டுச் சிறப்பை மதிப்பாய்வு செய்வதற்கு உதவும் வகையில், இந்நூலில் நிழற்படங்கள். வரைபடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது, கடந்தகால மக்களின் சமூக வாழ்க்கையை பிரதிபலிப்பதோடு, அவர்களின் உள்ளுணர்வு, சிந்தனைத் திறன் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன.

பாறை மேற்பரப்புகளில் வரையப்பட்ட இக்காட்சிகள், கலை மீது கொண்டிருந்த அவர்களின் மதிப்பையும், சமூக ஒற்றுமையையும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. இந்நூல் மொத்தம் 734 பக்கங்களை கொண்டதாகும். இதில் 92 நிலப்படங்கள் 682 வண்ண நிழற்படங்கள் மற்றும் 528 கோட்டுருவ வரைபடங்கள் இடம்பெற்றுள்ளன.

Also Read: ரூ.24.30 கோடியில் ‘கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம்’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!