Tamilnadu

“கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா? தமிழ்நாடு தலைகுனியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ரூ.3458 கோடி, நூறு நாள் வேலை திட்ட நிதி ரூ.2000 கோடி, குடிநீர் இணைப்பு திட்ட நிதி ரூ3,112 கோடி உள்ளிட்ட எந்த நிதியையும் விடுவிக்காமலும் - வளர்ச்சி திட்டத்திற்கு ஒரு பைசா கூட ஒதுக்காமலும், தமிழ்நாட்டு மக்களைப் புறக்கணித்துள்ளது ஒன்றிய பாஜக அரசு.

தமிழ்நாட்டிற்கான நிதியும் இல்லை - வளர்ச்சித் திட்டமும் இல்லை என ஒன்றிய அரசு கைவிரித்த போதும் அவர்களது காலில் விழுந்து ஆதரித்துள்ளது அடிமை அதிமுக.

நிதி மறுப்பு ஒருபுறம் என்றால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சிதைத்து, நூறு நாள் வேலையையே இனி இல்லாமல் செய்து கிராம மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சட்டத்தை திரும்பப்பெறவோ, அதற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவோ செய்யாமல் ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்துள்ளது ஒன்றிய பாஜக அரசு. அதோடு அமெரிக்காவின் விவசாயம் சார்ந்த பொருட்களை இங்கே இறக்குமதி செய்து விற்க ஒப்புக்கொண்டு நமது விவசாயிகளின் வாழ்வையே கேள்விக்குறியாக்கி உள்ளது ஒன்றிய பாஜக அரசு.

ஒரே நேரத்தில் 100 நாள் வேலை ஒழிப்பு சட்டம், விவசாயத்தை அழிக்கும் ஒப்பந்தம் என கிராமப்புற மக்கள் மீது இரட்டை அணுகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளது ஒன்றிய பாஜக அரசு. இதற்கு உறுதுணையாக இருந்து துரோகம் செய்து வருகிறது அதிமுக.

நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம், புது புது சட்டங்கள், ஒப்பந்தங்கள் வழியே மக்களை வஞ்சிப்பது, நம் வளர்ச்சியைத் தடுத்து வீழ்ச்சியில் தள்ள துடிப்பது என அநீதி இழைத்து வரும் ஒன்றிய பாஜக வை எதிர்த்தும், அதோடு கூட்டு சேர்ந்து டப்பா எஞ்சின் மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் டெல்லியின் அடிமையாக்கத் துடிக்கும் அடிமை அதிமுகவைக் கண்டித்தும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், தமிழ்நாட்டுக்கான நிதிகளை மறுத்து அநீதியை இழைக்கும் NDA கூட்டணிக்கு “ஜீரோ”-வைத் திருப்பியளிப்போம் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”பட்ஜெட்டில் “ஜீரோ” கொடுத்தால் கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா?

தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்வதை மட்டுமே எண்ணமாகக் கொண்டு செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் திரண்டு தமிழ்நாட்டு மக்களின் குரலாகக் கேள்வி கேட்டுள்ளது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!

தமிழ்நாட்டுக்கான நிதிகளை மறுத்து அநீதியை இழைக்கும் NDA கூட்டணிக்கு “ஜீரோ”-வைத் திருப்பியளிப்போம்! TamilNadu VsNDA எனும் இந்த ஜனநாயகப் போரில் தமிழ்நாடு தலைகுனியாது! தமிழ்நாடு வெல்லட்டும்! வெல்வோம் ஒன்றாக!" என தெரிவித்துள்ளார்.

Also Read: நிதி ஒதுக்காமல் ஏமாற்றும் பிரதமர் மோடி : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்தது தமிழ்நாடு!