Tamilnadu
“இந்திய நாட்டை விற்க பா.ஜ.க-வுக்கு வெட்கமாக இல்லையா?” : மக்களவையில் ராகுல் காந்தி எம்.பி. சரமாரி கேள்வி!
மக்களவையில் ஒன்றிய பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.
அப்போது பேசிய ராகுல் காந்தி எம்.பி."ஒன்றை மட்டும் நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான போட்டியில், மிக முக்கியமான சொத்து இந்திய தரவு (Indian Data) தான். அமெரிக்கா ஒரு வல்லரசாக நீடிக்க வேண்டும் என்றாலும், தனது டாலரைப் பாதுகாக்க வேண்டும் என்றாலும், அதற்குத் திறவுகோல் இந்திய தரவுதான்.
ஒருவேளை 'இந்தியா' கூட்டணி அதிபர் ட்ரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினால், நாங்கள் என்ன சொல்வோம் என்று நான் கூறுகிறேன். முதலில், 'அதிபர் ட்ரம்ப் அவர்களே, இந்தச் சமன்பாட்டில் மிக முக்கியமானது இந்திய தரவு. உங்கள் டாலரைப் பாதுகாக்க வேண்டுமா? நாங்கள் உங்கள் நண்பர்கள். நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம். ஆனால், உங்கள் டாலரைப் பாதுகாக்கக்கூடிய மிகப்பெரிய சொத்து இந்திய மக்களிடம் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்' என்போம்.
21-ஆம் நூற்றாண்டில் நமது மக்களின் ஞானம், விருப்பங்கள், கற்பனை மற்றும் பயம் ஆகியவற்றிற்கு மிகப்பெரிய மதிப்பு கிடைத்துள்ளது. முன்பு மக்கள் தொகை ஒரு சுமை எனச் சொல்லப்பட்டது, ஆனால் இன்று அதுவே நமது பலம்.
நாங்கள் அவரிடம் சொல்லும் இரண்டாவது விஷயம்: 'மிஸ்டர் ட்ரம்ப், எங்களது எரிசக்தி பாதுகாப்பு (Energy Security) என்பது எங்களது உரிமை. என்ன நடந்தாலும் அதை நாங்கள் பாதுகாப்போம்.' மூன்றாவதாக, 'உங்கள் நாட்டு விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டிய தேவை உங்களுக்கு இருப்பதைப் போலவே, நாங்களும் எங்கள் விவசாயிகளைப் பாதுகாப்போம்' என்போம்.
நாங்கள் பாகிஸ்தானுக்கு சமமாக நடத்தப்படுவதை ஏற்கமாட்டோம். ட்ரம்ப் பாகிஸ்தான் ராணுவத் தளபதியுடன் காலை உணவு உண்பதை முடிவு செய்தால், அதை நாங்கள் கேள்வி கேட்போம். ஆனால் இப்போது என்ன நடந்துள்ளது? நீங்கள் ஒரு வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளீர்கள்... இந்தியாவை வல்லரசாக்கக்கூடிய தரவுகளின் மீதான கட்டுப்பாட்டை மோடி அரசு விட்டுக்கொடுத்துள்ளது.
டிஜிட்டல் வர்த்தக விதிகள், தரவு உள்ளூர்மயமாக்கல் (Data localisation) இல்லாமை, அமெரிக்காவிற்கு தடையற்ற தரவு பரிமாற்றம் என அனைத்தையும் விட்டுக்கொடுத்துவிட்டீர்கள். பெரிய நிறுவனங்களுக்கு 20 ஆண்டுகால வரிச்சலுகை அளித்துள்ளீர்கள்.
நீங்கள் இந்தியாவை விற்றுவிட்டீர்கள் என்று நான் கூறுகிறேன். பாரத மாதாவை விற்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா? சாதாரண சூழலில் பிரதமர் இந்தியாவை விற்கமாட்டார் என எனக்குத் தெரியும். ஆனால் அவர்கள் அவரது கழுத்தைப் பிடித்து நெரிக்கிறார்கள். பிரதமரின் கண்களில் பயம் தெரிகிறது.
அனில் அம்பானி என்ற ஒரு தொழிலதிபர் இருக்கிறார், அவர் ஏன் இன்னும் சிறையில் இல்லை என்று நான் கேட்க விரும்புகிறேன். அதற்கு காரணம், அவருடைய பெயர் எப்ஸ்டீன் கோப்புகளில் (Epstein Files) இருப்பதுதான். ஹர்தீப் பூரியிடம் (Hardeep Puri) நான் ஒன்று கேட்க விரும்புகிறேன், எப்ஸ்டீனிடம் அவரை அறிமுகப்படுத்தியது யார்? அவரை அறிமுகப்படுத்தியது யார் என்பது எனக்கும் தெரியும், ஹர்தீப் பூரிக்கும் தெரியும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“பாசிச அரசியல் தமிழ்நாட்டில் நிறைவேறாது” : INDIA TODAY நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
பெரம்பலூர் கைத்தறி உற்பத்திக்கான நிலுவலையிலுள்ள திட்டங்களின் நிலை என்ன?: மக்களவையில் அருண் நேரு MP கேள்வி
-
ஈரோட்டில் ஜவுளிக் கழிவுகள் மேலாண்மையை முறைப்படுத்த வேண்டும் : மாநிலங்களவையில் தி.மு.க MP வலியுறுத்தல்!
-
“போலி விவசாயி பழனிசாமியின் பொய்கள்” முரசொலி தலையங்கம் கடும் விமர்சனம்!
-
விவசாயிகளுக்கான நிதிகளை தாமதப்படுத்துவது ஏன்? : நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய கலாநிதி வீரசாமி MP!