Tamilnadu

சென்னையில் 4,000–வது குடமுழுக்கு : அமைச்சர் சேகர்பாபு சொன்ன தகவல்!

4,000-வது குடமுழுக்காக சென்னை, பெரம்பூர், அருள்மிகு சேமாத்தம்மன் திருக்கோயில் குடமுழுக்கு வருகின்ற 28.01.2026 அன்று வெகு சிறப்பாக நடைபெற உள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

இந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள தொன்மையான திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், குடமுழுக்கு நடத்துதல், திருக்குளங்கள், திருத்தேர்கள் மற்றும் நந்தவனங்களை சீரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்தல், திருக்கோயில்களின் வருவாய் இனங்களை முறைப்படுத்தி வசூலித்தல் போன்ற பல்வேறு பணிகளை செவ்வனே மேற்கொண்டு வருகிறது.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிப்படி குடமுழுக்கு நடைபெறாத திருக்கோயில்களை கண்டறிந்து திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்தும் பணிகளை முன் எப்போதும் இல்லாத அளவில் இந்து சமய அறநிலையத்துறை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக 400 ஆண்டுகளுக்கு பிறகு கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலுக்கும்,300 ஆண்டுகளுக்கு பிறகு, காஞ்சிபுரம் மாவட்டம், சாத்தனஞ்சேரி, அருள்மிகு கரியமாணிக்க வரதராஜ பெருமாள் திருக்கோயிலுக்கும், 150 ஆண்டுகளுக்கு பிறகு இராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலம், அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயிலுக்கும், 123 ஆண்டுகளுக்கு பிறகு திருநெல்வேலி மாவட்டம், அரிகேசவநல்லூர், அருள்மிகு பெரியநாயகி சமேத அரியநாத சுவாமி திருக்கோயிலும், 110 ஆண்டுகளுக்கு பிறகு வேலூர் மாவட்டம், வெட்டுவானம், அருள்மிகு திரௌபதியம்மன் திருக்கோயிலுக்கும், 100 ஆண்டுகளுக்கு பிறகு 22 திருக்கோயில்களுக்கும், 80 ஆண்டுகளுக்கு பிறகு 10 திருக்கோயில்களுக்கும், 70 ஆண்டுகளுக்கு பிறகு 14 திருக்கோயில்களுக்கும் , 60 ஆண்டுகளுக்கு பிறகு 21 திருக்கோயில்களுக்கும், 50 ஆண்டுகளுக்கு பிறகு 48 திருக்கோயில்களுக்கும், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளன.

1,000 ஆண்டுகள் தொன்மையான திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.425 கோடியை அரசு மானியமாக வழங்கியுள்ளார்கள். அரசு மானியம், பொதுநல நிதி, திருக்கோயில் நிதி மற்றும் உபயதாரர்கள் நிதி என மொத்தம் ரூ.560 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 352 திருக்கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, இதுவரை 77 திருக்கோயில்களில் குடமுழுக்கு நிறைவு பெற்றுள்ளன.

ஆதிதிராவிடர்/பழங்குடியினர் வாழும் பகுதிகளில் உள்ள திருக்கோயில்கள் மற்றும் கிராமப்புற திருக்கோயில்களுக்கான திருப்பணி நிதியுதவி ரூ.1 இலட்சத்திலிருந்து ரூ.2.50 இலட்சம் ஆக உயர்த்தப்பட்டு, இதுவரை 10,000 திருக்கோயில்களுக்கு ரூ.212.50 கோடி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. மாநில அளவிலான வல்லுநர் குழுவால் 14,979 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர், 1,000-வது குடமுழுக்கு சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலிலும், 2,000-வது குடமுழுக்கு மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயிலிலும், 3,000-வது குடமுழுக்கு நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகலூர் அருள்மிகு அக்னீஸ்வரர்சுவாமி திருக்கோயிலிலும் இறையன்பர்கள் மகிழ்ச்சியுறும் வகையில் வெகு விமரிசையாக நடத்தப்பட்டன.

திராவிட மாடல் அரசின் மணிமகுடமாய், இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றுச் சாதனையாக, 4,000-வது குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா சென்னை, பெரம்பூர் அருள்மிகு சேமாத்தம்மன் திருக்கோயிலில், வருகின்ற ஜனவரி 28 அன்று அன்னைத் தமிழில் மந்திரங்கள் முழங்க சிறப்பாக நடைபெற உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Also Read: “பிரதமர் மோடி வருகை பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய கெடுதலாகவே அமையும்; வருக பிரதமர்” : முரசொலி!