Tamilnadu

பிராட்வேயில் ரூ.23 கோடியில் “முதல்வர் படைப்பகம் & நவீன நூலகம்”... அடிக்கல் நாட்டினார் துணை முதலமைச்சர்!

சென்னை, துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் பணிமனை 56 மற்றும் 60 பகுதிகளைச் சேர்ந்த மண்ணடி, கிளைவ் பேட்டரி, ஜார்ஜ் டவுன் ஆகிய பகுதிகளில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், பிராட்வே டேவிட்சன் சாலையில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தலா 15 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை மற்றும் மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டி என 2 குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டு வருகின்றன.

மேலும் இந்த பணியில் குடிநீரை விநியோகம் செய்வதற்க்காக குடிநீர் விநியோக புதிய குழாய்கள் பதிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளின் மூலமாக 70,000 பொதுமக்கள் பயனடைய உள்ளனர். 

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று பிராட்வே, டேவிட்சன் சாலையில் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும நிதியின் கீழ் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தலா 15 இலட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட கீழ்நிலை மற்றும் மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டிகள் அமைக்கும் பணிகளின் முன்னேற்றத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

தொடர்ந்து, துணை முதலமைச்சர் அவர்கள் சென்னை, துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பிராட்வே, பிரகாசம் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், வார்டு எண் 55, 56, மற்றும் 57 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட பிரகாசம் சாலையின் இருபுறமும்  ரூபாய் 1.26 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 128 எண்ணிக்கையிலான மின்விளக்குகளின் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிராட்வே, பிரகாசம் சாலையில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 23.06 கோடி ரூபாய் மதிப்பீட்டில் "முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம்" கட்டடம் கட்டுவதற்கான பணிகளை அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சிகளில் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., சிஎம்டிஏ உறுப்பினர் செயலர்/முதன்மைச் செயலாளர் கோ.பிரகாஷ், இ.ஆ.ப., முதன்மை செயல் அலுவலர் அ.சிவஞானம், இ.ஆ.ப., துணை ஆணையர்கள் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப., (வடக்கு) கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., மண்டலக்குழுத் தலைவர் பி.ஶ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர்கள் எல்.தாஹா நவீன், வெ.பரிமளம், ராஜேஷ் ஜெயின், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Also Read: “வணிகர்களின் தோழன் திராவிட மாடல் அரசு” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!