Tamilnadu

ரயிலுக்கு இடையே சிக்கிக் கொண்ட பெண் : உயிர் காத்த RPF வீரர் - குவியும் பாராட்டு!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரமிளா. இவர் செங்கல்பட்டு ரயில் நிலையத்தின் 6-ஆவது நடைமேடையில், விழுப்புரம் நோக்கிச் செல்லும் ரயிலுக்காகக் காத்திருந்தார்.

அப்போது, ரயில் வந்ததும் அதில் ஏற முயன்ற பிரமிளா, எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி ரயிலுக்கும் தண்டவாளத்திற்கும் இடையேயான இடைவெளியில் விழுந்து சிக்கிக் கொண்டார் . இதைக் கண்டு சக பயணிகள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர்.

இதை கவனித்த, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) வீரர் தயாநிதி, உடனடியாக விசிலை ஊதி சிக்னல் காட்டி ரயிலை நிறுத்தச் செய்தார்.

பின்னர் தண்டவாளத்தில் இறங்கிய தயாநிதி, பிரமிளாவை மீட்டு சிகிச்சைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நலமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், சமயோசிதமாகச் செயல்பட்டுப் பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய தயாநிதிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: வாக்குறுதி கொடுத்த அடுத்த நாளே 169 செவிலியர்கள் பணிநிரந்தரம் : ஆணைகளை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!