Tamilnadu

வேளாங்கண்ணி TO இலங்கை... ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருள்.. இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது!

நாகப்பட்டினத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு படகு மூலம் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து தேசிய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசார் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணிக்கு வருகை தந்து ரகசியமாக பல்வேறு இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வேளாங்கண்ணி கார் பார்க்கிங்கில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரித்தபோது அவர்கள் 3 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் அவர்களிடத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் 3 பேரும் மெஸ்கலின் (Mescaline) என்ற போதைப் பொருள் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் கடல் வழியாக படகு மூலம் இலங்கைக்கு மெஸ்கலின் கடத்த இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பிடிப்பட்ட மெஸ்கலின் போதைப் பொருளை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர். விசாரித்ததில், அந்த போதைப்பொருளின் விலை சுமார் ரூ.6 கோடி என்று தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், நாகப்பட்டினம் வெளிப்பாளையம் புதிய நம்பியார் நகரை சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் நாகப்பட்டினம் வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் (40), மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சுனாமி குடியிருப்பு மீனவர் காலனியை சேர்ந்த ஆனந்தராஜ் (33), நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தும்மாச்சி பகுதியை சேர்ந்த முருகன் (எ) காஞ்சிநாதன் (31) ஆகிய 3 பேர் என்று தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் தேசிய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இதைத் தொடர்ந்து 3 பேரும் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். பின்னர் நாகப்பட்டினம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் வீட்டில் ஆஜர் படுத்தப்பட்டு மேல் விசாரணைக்காக சென்னை அழைத்து செல்லப்பட்டனர்.

போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “ரூ.86.40 இலட்சம் மதிப்பீட்டில் வீடற்றோருக்கான இரவுநேர காப்பகம் திறப்பு!” : முழு விவரம் உள்ளே!