Tamilnadu
“திராவிட மாடல் ஆட்சிக்கான ஒரு மாபெரும் நற்சான்றுதான் 16% வளர்ச்சி!” : அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்!
சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று (டிச.17) தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆட்சிமன்றக் குழுவின் மூன்றாவது கூட்டத்தில் நீலக் கார்பன் சேமிப்பில் தமிழ்நாட்டின் கடல்சார் வாழிடங்களின் பங்கு (BLUE CARBON WEALTH OF TAMIL NADU) குறித்த தொழில்நுட்ப அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
தொடர்ந்து நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி பின்வருமாறு,
நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய தொலைநோக்கு சிந்தனைகளால், அவருடைய தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் புதிய தொழில் கொள்கைகளால் வரக்கூடிய 2030-ம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க பொருளாதாரத்தை நாம் எட்டுவோம் என்கின்ற மாபெரும் இலக்குடன் செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய முதலமைச்சர் அவர்களுடைய முன்னெடுப்புகளால், தமிழ் நாட்டில் பொருளாதா வளர்ச்சி இன்றைக்கு ஒரு மிகக் குறிப்பிடத்தக்க சிறப்பான ஒரு உச்சத்தைத் தொட்டிருக்கிறது.
எனவே, நம்முடைய GSTP மாநில ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு இன்றைக்கு 2023-2024-ஆம் ஆண்டுகளில் 26.88 இலட்சம் கோடியாக இருந்த தமிழ்நாட்டினுடைய பொருளாதாரம், கடந்த ஆண்டு 2024-25-ஆம் நிதியாண்டில் 31.19 இலட்சம் கோடிகளாக உயர்ந்து 16 சதவிகித வளர்ச்சியை நாம் இன்றைக்கு தொட்டிருக்கிறோம் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன்.
நம்முடைய ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் தரவுகளின் வாயிலாக கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய வளர்ச்சி விகிதம் நம்முடைய முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசின் நிதி நிர்வாக மேம்பாட்டு குழு, நான் தொடக்கத்தில் குறிப்பிட்டது போல தமிழ்நாடு அரசின் சிறப்பான கொள்கைகளுக்கும், எடுத்திருக்கக்கூடிய மாபெரும் வெற்றியாக நாம் இதைச் சொல்லலாம்.
இத்தகைய உயர் வளர்ச்சி விகிதம் என்பது கடந்த மூன்று ஆண்டுகளாகவே தொடர்ந்து இருக்கிறது. 2021-22-ஆம் ஆண்டுகளில் நாம் குறிப்பிட்ட காலத்தில் 15.91 சதவிகிதமாகவும், 2022-23-ஆம் ஆண்டுகளில் 14.47 சதவீதமாகவும், 2023-24-ஆம் ஆண்டுகளில் 13.34 சதவீதமாக தொடர்ச்சியாக நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பிறகு இந்த வளர்ச்சி விகிதம் ஏற்பட்டு இன்றைக்கு அது 16 சதவீதத்தை தொட்டிருப்பது மிகப்பெரிய ஒரு வளர்ச்சியும், திராவிட மாடல் ஆட்சியின் வெற்றிக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக இன்றைக்கு இது விளங்கியிருக்கிறது.
அதிலும் குறிப்பாக, இந்த வளர்ச்சியில் உற்பத்தித்துறை மிகப்பெரிய பங்களிப்பினை செய்திருக்கிறது. இந்த நான்கு ஆண்டுகளில் நீங்கள் பார்த்தீர்கள் என்று சொன்னால், தமிழ்நாட்டின் இந்த பொருளாதாரம்
GSTP-யின் வளர்ச்சி என்பது இந்த உற்பத்தித் துறையின் பொறுத்தமட்டில், 1.46 இலட்சம் கோடியாக இருந்தது, இரண்டு மடங்காக இன்றைக்கு அது பெருகி இருக்கிறது.
அதேபோல மகராஷ்டிராவில் ஒப்பிட்டு நோக்கினால், ஒரு வளர்ச்சி அடைந்த உற்பத்தித்துறை மாநிலமாக இருக்கக் கூடியதில், 0.71 இலட்சம் கோடியாக இருக்கக்கூடிய இந்த மகராஷ்டிராவை விட, தமிழ்நாடு உற்பத்தித் துறையில் மிகப்பெரிய ஒரு முன்னேற்றத்தை இன்றைக்கு கண்டிருக்கிறது என்பதை நான் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.
அதற்குக் காரணம் தமிழ்நாட்டில், இன்றைக்கு பார்த்தால், ஏறத்தாழ 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டிருக்கக்கூடிய தொழிற்சாலைகள் இருக்கிறது. அவற்றில் ஏறத்தாழ 27.7 இலட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு பெறக்கூடிய நிலைமை வந்திருக்கிறது.
இந்த பொருளாதார வளர்ச்சியில் குறிப்பாக கட்டுமானம் (Construction sectors) என்பது, இந்த வளர்ச்சிக்கு மிகுந்த அளவில் உதவி செய்யக்கூடிய வகையில், 2023-24-ஆம் ஆண்டுகளில் 15.93 சதவிகிதமும், அதேபோன்று 2024-25-ஆம் ஆண்டுகளில் 11 சதவிகிதம் என்று அதற்கான பங்களிப்பைத் தந்திருக்கிறது.
அதுபோல, சேவைத் துறையை (Service Sector) எடுத்துக்கொண்டால், தமிழ்நாட்டினுடைய வளர்ச்சியில் தலா 53% தன்னுடைய பங்களிப்பை செலுத்தி, real growth என்கின்ற வகையில் 2024-25-ஆம் ஆண்டுகளில் நம்முடைய சேவைத் துறை 11.3 சதவீத அளவிற்கு தன்னுடைய பங்களிப்பை தந்திருக்கிறது. குறிப்பாக, ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை நாம் நாம் எட்டவேண்டும் என்று சொன்னால், ஏற்றுமதியில் மிகப் பெரிய முன்னேற்றத்தை நாம் காண வேண்டும்.
அதைப்போல, நம்முடைய முதலமைச்சர் அவர்களின் தொடர் முன்னெடுப்புகளால் பல்வேறு உலக நாடுகளில் அவர் பயணம் செய்து, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு, அதன் வாயிலாக முதலீட்டாளர்களின் சந்திப்பின் மூலமாக, 11 இலட்சத்து 40 ஆயிரத்து 731 கோடி முதலீடுகள் பெறப்பட்டு, 1016 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ 34 இலட்சத்து 8 ஆயிரத்து 522 இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் நாம் வேலை வாய்ப்புகளை கொண்டு வந்திருக்கிறோம்.
ஏற்றுமதியை பொறுத்தவரையில், நாம் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை பெறுவதற்கு அடிப்படையாக அமைந்திருக்கின்ற தமிழ்நாட்டின் ஏற்றுமதியின் சாதனை ஒன்றிய அரசின் நிதியாத் அமைப்பின் தரவுகளின்படி 2021-22-ஆம் நிதியாண்டில், 1.86 பில்லியன் டாலராக இருந்தது 2022-23-ஆம் நிதியாண்டில் 5.37 பில்லியன் டாலராகவும், 2023-24-ஆம் நிதியாண்டில் 9.56 பில்லியன் டாலராகவும், 2024-25-ஆம் நிதியாண்டில் 14.65 பில்லியன் டாலராக மின்னணு பொருள்களின் ஏற்றுமதி மூன்று ஆண்டுகளில், ஏறத்தாழ ஏழு மடங்கு அதிகரித்திருக்கிறது. ஏறத்தாழ 700 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது என்பதை நம்முடைய அமைப்பு தெரிவித்திருக்கிறது.
இந்த மின்னணு பொருள்களின் ஏற்றுமதியில் நம்முடைய தமிழ்நாடு மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற்றிருக்கிறது. Welfare measures என்ற வகையில், தமிழ்நாடு வளர்ச்சி விகித குறியீடுகளில் அவர் கொண்டு வந்திருக்கக்கூடிய பல்வேறு திட்டங்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், விடியல் பயணத் திட்டம், காக்கும் கரங்கள் திட்டம், நான் முதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம் என்று பல்வேறு திட்டங்களின் மூலமாக தமிழ்நாட்டின் நலத் திட்டங்களிலும் தமிழ்நாடு அரசு ஒரு மாபெரும் கவனத்தைச் செலுத்தியிருக்கிறது.
அதேபோல, GR (Gross Environment Ratio) இன்றைக்கு உயர் கல்வியில் 47 சதவிகிதம் அகில இந்திய சராசரி 28.4 சதவிகிதமாக இருக்கும்போது தமிழ்நாடு இன்றைக்கு 47 சதவிகிதம் வந்திருக்கிறது. அதேபோல உயர்கல்வி அதிகமாக பெற்றிருக்கக்கூடிய மாநிலமாக நாம் இன்றைக்கு வந்திருக்கிறோம்.
நான் சட்டமன்றத்தில் கூட சொன்னேன் – நிதிப் பற்றாக்குறையை (fiscal deficit) நாம் எப்போதும் நிதி மேலாண்மைக்கு உட்பட்டுதான் கையாண்டிருக்கிறோம் என்பதையும், அது மாநில ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும், நம்முடைய நிதிப் பற்றாக்குறை என்பது 3 சதவிகிதத்திற்குள்ளாகவே வரக்கூடிய 2025-26-ஆம் நிதியாண்டில் அது கட்டுப்படுத்தப்படும் என்பதை நான் தெரிவித்திருக்கிறேன்.
அதேபோல, கடனுக்கும் (debt), மாநிலத்தின் உற்பத்தி மதிப்பீட்டிலான அந்த ratio-வில், அது கடந்த 2021-22-ஆம் ஆண்டில் 27 சதவிகிதமாக இருந்தது; 2024-25-ஆம் ஆண்டில் ஏறத்தாழ 26 சதவிகிதமாக குறைவாக வந்திருக்கிறது என்பதையும் நான் இங்கே எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.
ஒட்டுமொத்தமாக பார்த்தால், தமிழ்நாட்டின், நீடித்த, நிலையான வளர்ச்சி என்பது low inflation இருந்தாலும் சரி, அல்லது வெளிநாட்டு நேரடி முதலீடுகள் வருவதாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு கட்டத்திலும் நான் எடுத்துக் காட்டியிருக்கக்கூடிய தொழில் முதலீடுகளை ஊக்குவிப்பதாக இருந்தாலும் சரி இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக நம்முடைய 1 டிரில்லியன் பொருளாதாரத்தை நாம் அடைவதற்கு நம்முடைய முதலமைச்சர் அவர்களுடைய முன்னெடுப்பால், அவர்கள் தொடர்ந்து மேற்கொண்டிருக்கக்கூடிய பல்வேறு பணிகளால் இது சாத்தியமாகி இருக்கிறது.
இன்றைக்கு ஒட்டுமொத்த குறியீடாக 16 சதவிகித வளர்ச்சியை நம்முடைய ரிசர்வ் பேங்க ஃஆப் இந்தியா வழங்கி இருப்பதும், நம்முடைய தமிழ்நாட்டின் நிதி மேலாண்மைக்கு ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு, தொழில் வளர்ச்சிக்கு, நம்முடைய சமூக வளர்ச்சிக்கு, நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலையிலான திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்திருக்கக்கூடிய ஒரு மாபெரும் நற்சான்று இந்த 16 சதவிகிதம் வளர்ச்சி என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
Also Read
-
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை!: டிச.18 அன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!
-
2026 சட்டமன்றத் தேர்தல் : கனிமொழி MP தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு - தி.மு.க அறிவிப்பு!
-
“VBGRAMG-க்கு எப்படி முட்டு கொடுக்கப் போகிறார் எடப்பாடி பழனிசாமி?” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
“Climate Action, Clean Energy ஆகிய இலக்குகளில் தமிழ்நாடு முதலிடம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
பீகாரில் மகளிர் திட்டத்தில் முறைகேடு : ஆண்களின் வங்கி கணக்தில் வரவு வைக்கப்பட்ட பணம்!