Tamilnadu

“பயிற்சிக்கும், முயற்சிக்கும் வயது வரம்பே கிடையாது.. அதற்கு உதாரணம்தான் கலைஞர்...” - துணை முதலமைச்சர்!

சென்னை, நந்தனம் மெட்ரோ இரயில் நிறுவன கூட்டரங்கில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் மூலம் திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு :-

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பாக வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பயிற்சியை தொடங்கி வைப்பதிலும், இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் மற்றும் திறன் ஊக்கத்தொகை (Skill Incentives) வழங்குவதிலும் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். 

நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு அமைந்த நாள் முதல், இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு தேவையான அத்தனை நடவடிக்கைகளையும் நம்முடைய அரசு மேற்கொண்டு வருகின்றது.

குறிப்பாக, நம்முடைய முதலமைச்சர் அவர்கள், தன்னுடைய பிறந்த நாள் அன்று மார்ச் 1 ஆம் தேதி தன்னுடைய கனவு திட்டம் என்றுதான் இந்த நான் முதல்வன் திட்டத்தைஅறிவித்து தொடங்கி வைத்தார்கள். இந்த நான்கு வருடங்களில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 42 லட்சம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சியை நம்முடைய அரசு வழங்கி இருக்கின்றது. 

அதுமட்டுமல்ல, 3 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பையும் நம்முடைய அரசு வழங்கி இருக்கின்றது. அதனுடைய தொடர்ச்சியாகத்தான், இன்றைக்கு Tamil Nadu Skill Development Corporation மூலமாக இந்த வெற்றி நிச்சயம் திட்டமும் செயல்படுத்தப்படுகின்றது. இதன் மூலமாக பள்ளி, கல்லூரி முடித்தவர்கள், இடைநின்றவர்கள், ஏன் வேலையில் இருக்கின்றவர்களுக்கு கூட நாம் திறன் பயிற்சி (Skill Training) வழங்கி கொண்டிருக்கின்றோம்.

நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று பலமாதங்கள் பயிற்சி எடுத்து கொண்டு இங்கே வந்திருக்கின்றீர்கள். உங்களுக்கு இருக்கின்ற இந்த எண்ணமும், ஆர்வமும் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து இளைஞர்களுக்கும் நிச்சயமாக வரவேண்டும்.

நமக்கு ஒரு திறன் (skill) இருக்கு என்பதே உங்களுக்கு ஒரு மிகப் பெரிய confidence Boostஐ நிச்சயமாக கொடுக்கும். அது எந்தவிதமான திறனாக வேண்டுமானாலும் இருக்கலாம். வெல்டிங் திறனாக இருக்கலாம், கோடிங் திறனாக இருக்கலாம், வீடியோ எடிட்டிங் திறனாக இருக்கலாம். இப்படி எப்படிப்பட்ட திறனாகவும் இருக்கலாம்.

நம்முடைய மாணவர்களுக்கு பட்டப்படிப்பு மட்டும் பத்தாது, கூடுதலாக ஏதாவது திறனும் (Skill) தெரிந்திருக்க வேண்டும் என்றுதான் இந்த ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் தொடங்கப்பட்டது. ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலமாக சுமார் 60 ஆயிரம் இளைஞர்கள் இன்றைக்கு பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

திறன் பயிற்சியில் (Skill Training) முக்கியமானதே கற்றுக் கொண்ட, திறனை நாம் அவ்வப்போது Technologyக்கு ஏற்றார் போல் Update செய்து கொண்டு வரவேண்டும். ஒரு திறனை கற்றுக் கொண்ட பிறகு, நமக்கு தான் எல்லாம் தெரியும் என்று அமைதியாக இருந்துவிடக் கூடாது. ஏன் என்றால், அதுவே நம்முடைய வளர்ச்சிக்கு தடையாக இருந்திவிடும்.

அதற்கு இருக்கக்கூடிய சிறந்த எடுத்துக்காட்டாக நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய வாழ்கையை எடுத்துக் கொள்ளுங்கள். முதன்முதலில் பத்திரிகை ஆரம்பிக்கும்போது, அது ஒரு கையெழுத்து பிரதி பத்திரிகையாகத் தான் ஆரம்பித்தார். ஒவ்வொரு பிரதியையும் அவரே கைப்பட எழுதினார். அதன்பிறகு, அச்சிடும் தொழில்நுட்பம் (Printing Technology) வந்த பிறகு update செய்து கொண்டு அதை அச்சிட (print) ஆரம்பித்தார்.

அதன்பிறகு Internet, social media வந்த பிறகு அதை Internetல் Publish செய்ய ஆரம்பித்தார். இன்னும் சொல்லப்போனால், 90 வயது வரை Social media, Facebook, Twitter போன்றவற்றில் Active ஆக இருந்த ஒரே தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள்தான். ஏனென்றால், அவர் காலத்திற்கேற்ப ஏற்ப தன்னை update செய்துகொண்டே இருந்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள். பயிற்சிக்கும், முயற்சிக்கும் வயது வரம்பே கிடையாது. எல்லா வயதிலும் எல்லாராலும் சாதிக்க முடியும்.

உங்களுடைய திறனை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நம்முடைய தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இன்றைக்கு பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருகின்றது. ஆடை, நகை வடிவமைப்பு, தகவல் தொழில் நுட்பம், மின்னணுவியல் (electronics), அழகுக் கலை, உணவுத் துறை, விவசாயம் என்று கிட்டத்தட்ட 35 துறைகளில் இங்கே பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த கழகத்தின் மூலமாக பயிற்சி பெறக்கூடியவர்களில் 72 சதவீதம் பேர் சமூகத்தினுடைய பின்தங்கிய பிரிவை சேர்ந்தவர்கள் என்பது எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி, கூடுதல் சிறப்பு. அதில், இலங்கை முகாம் வாழ் தமிழர்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், மனநல சிகிச்சை பெற்று மீண்ட இளைஞர்கள் என்று பல்வேறு தரப்பினரும் இருக்கின்றார்கள். சிறைச்சாலை சீர்திருத்த பயனர்கள், விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர்கள், மீனவர்கள், மலைவாழ் பழங்குடியினர் என்று அனைத்து தரப்பு இளைஞர்களும் இதில் பயிற்சி எடுக்க வந்திருக்கின்றீர்கள். இன்னும் பயிற்சி பெற இருக்கின்றீர்கள்.

நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சமீபத்தில் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். அந்த திட்டத்தினுடைய பயனாளிகளுக்கு திறன் பயிற்சி கொடுப்பதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இந்த துறைக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.

அதன்படி, அரசு காப்பகத்தில் இருக்கக்கூடிய ஆதரவற்ற மாணவர்களுக்கும் அவர்களுடைய வேலைவாய்ப்புக்கு ஏற்றார்போல் இங்கே பயிற்சி வழங்கப்பட இருக்கின்றது.இது தான், திராவிட மாடல். இப்படி, ஒட்டு மொத்த சமூகத்தையும் முன்னேற்றுவது தான் திராவிட மாடல்.

இதில் கூடுதல் சிறப்பாக, பயிற்சி பெறக்கூடியவர்களுக்கு அவர்களுடைய பயிற்சியின் அடிப்படையில் 12 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையும் இங்கே வழங்கப்பட இருக்கின்றது.

அதுமட்டுமல்லாமல், Factory Skill School என்ற தொழிற்சாலை திறன் பள்ளிகள் மூலமாக, தொழிற்சாலைகளிலே பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இளைஞர்களுக்கு அங்கேயே வேலைவாய்ப்பும் வழங்கப்படுகின்றது.

கைவினை கலைஞர்களுக்கும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த அவர்களுக்கு திறன் பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றது. இவர்களுக்கெல்லாம் வங்கிகள் மூலமாக கடனுதவியும் ஏற்பாடு செய்யப்பட இருக்கின்றது.

பயிற்சிகளை முடித்திருக்கக்கூடிய உங்கள் அனைவருடைய வாழ்க்கையிலும் ‘வெற்றி நிச்சயம்’ என்று இந்த நேரத்தில் உங்கள் அத்தனைபேரையும் வாழ்த்துகின்றேன். உங்களுக்கு பயற்சிகளை அளித்த அனைத்து நிறுவனங்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக அலுவலர்கள், வந்திருக்கக்கூடிய அத்தனைபேருக்கும் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்து, இந்த வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன்.

Also Read: ”அறிவுத்திருவிழா - இது கொள்கைக்கு கிடைத்த வெற்றி” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை!