Tamilnadu

மோன்தா புயல் : சென்னை - ஆந்திரா இடையே 9 விமானங்கள் ரத்து!

மோன்தா புயல் இன்று மாலையில் இருந்து, இரவுக்குள், ஆந்திர மாநிலம் கடலோரப் பகுதியான மசூலிப்பட்டினத்திற்கும், கலிங்கப்பட்டினத்திற்கும் இடையே, காக்கிநாடா அருகே, தீவிரப்புயலாக கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை அடுத்து ஆந்திர மாநிலத்தில், விஜயவாடா, விசாகப்பட்டினம், ராஜமுந்திரி ஆகிய விமான நிலையங்களில் இருந்து, சென்னைக்கு வரும் 6 விமானங்கள், சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் செல்லும் 3 விமானங்கள், மொத்தம் 9 விமானங்கள் ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று காலை 9.45 மணிக்கு, விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மதியம் 1.35 மணிக்கு, ராஜமுந்திரியிலிருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மதியம் 1.40 மணிக்கு, விஜயவாடாவில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மதியம் 1.45 மணிக்கு, விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், இரவு 7.20 மணிக்கு விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், இரவு 9.05 மணிக்கு விஜயவாடாவில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 6 விமானங்கள், இன்று ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைப்போல் சென்னையில் இருந்து, ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் விமானங்கள்இன்று காலை 10 மணிக்கு சென்னை- ராஜமுந்திரி இண்டிகோ ஏர்லைன்ஸ், மாலை 3.55 மணிக்கு சென்னை- விஜயவாடா இண்டிகோ ஏர்லைன்ஸ், மாலை 6.15 மணிக்கு சென்னை- விசாகப்பட்டினம் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய மூன்று புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் இன்று புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக 9 விமானங்கள், இதுவரையில் ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதியத்திற்கு மேல், மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும், அது குறித்து பின்பு அறிவிக்கப்படும் என்றும், சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.

அதோடு மோந்தா புயல், கனமழை எச்சரிக்கை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும், மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்படுவதோடு, விமானங்கள் காலதாமதமாக இயக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. எனவே விமான பயணிகள், தாங்கள் பயணம் செய்ய வேண்டிய, விமான நிறுவனங்களுடன், தொடர்பு கொண்டு, விமானங்கள் புறப்படும் நேரங்கள் போன்றவைகளை, கேட்டு அறிந்து கொண்டு அல்லது இணையதளங்களில் விமானங்கள் புறப்படும் நேரங்கள் வரும் நேரங்களை சரி பார்த்துக் கொண்டு, தங்கள் பயணத்தை மேற்கொள்ளும்படி, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில், தெரிவிக்கின்றனர்.

Also Read: பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு.. 12 மாநிலங்களில் நடத்தப்படும் SIR.. எந்தெந்த மாநிலங்கள்? எப்போது? - விவரம் !