Tamilnadu

“சென்னையில் அமைய இருக்கும் தமிழ்நாட்டின் நீளமான (14 கி.மீ) புதிய மேம்பாலம்!” : அமைச்சர் எ.வ.வேலு தகவல்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (5.10.2025) அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அமைச்சர் பி.கே‌சேகர்பாபு ஆகியோர் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி, மேடவாக்கம் டேங்க் ரோடு, கீழ்ப்பாக்கத்தில் பொதுப்பணித்துறையின் சார்பில் கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் ஒப்புயர்வு மையம் (TNIMHANS, Kilpauk) புதிய கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளையும்;

கொளத்தூர்-பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் உள்வட்ட சாலையை அடைவதற்கும், கொளத்தூர் ஏரி பூங்கா செல்வதற்கும் 600 மீட்டர் நீளம் மற்றும் 7.50 மீட்டர் அகலம் கொண்ட சேவை சாலையின் இருபுறமும் 2.00 மீட்டர் அகலத்திற்கு நடைபாதையும் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், கொளத்தூர் ஏரிக்கரையை வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது :

பருவமழை தொடங்க உள்ள நிலையில் நெடுஞ்சாலை துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தான கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் :

உங்களுடைய சந்திப்பிற்கு பிறகு, நானும் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் அவர்களும், நெடுஞ்சாலைத் துறையைப் பற்றிய ஆய்வை மேற்கொள்ள இருக்கிறோம். குறிப்பாக கொளத்தூர் பகுதியில் இந்த ஆய்வு நடைபெற இருக்கிறது.

சென்னை மாநகராட்சியில் மிகவும் குறைவான சாலைகளே நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. பெரும்பாலான சாலைகள் – சுமார் 85% சதவீதம் – மாநகராட்சி கட்டுப்பாட்டில் தான் உள்ளன. சில சமயங்களில் பத்திரிகை நண்பர்கள் நெடுஞ்சாலைத் துறையின் சாலையை மாநகராட்சிக்கு சொந்தமானதாகவும், மாநகராட்சியின் சாலையை நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானதாகவும் எழுதியிருக்கின்றனர். இரண்டுமே அரசு சார்ந்த துறைகள்தான் என்றாலும், தெளிவான விவரங்களுடன் தவறான புரிதல் தவிர்க்கப்படவேண்டும்.

மழைக்காலம் என்பது ஒவ்வொரு ஆண்டும் இயற்கையாக வரக்கூடிய ஒன்று. எனவே, மழை தொடங்குவதற்கு முன்பே சாலை பணிகளை முடிக்க வேண்டும் என்ற ஆணையை நாங்கள் வழங்குகிறோம். அதன் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சில நேரங்களில் பணி தாமதமாகும் போது, பாதுகாப்பு கருதி, பேரிகேட் போன்றவை அமைக்க வேண்டும். விபத்து ஏற்படக்கூடாது என்பதற்காகவே சில கட்டுப்பாடுகளை வைக்கிறோம். பணிகளை நிறுத்த வேண்டும் என்று எந்த நிலையிலும் ஆணை பிறப்பிக்கப்படவில்லை.

மழைக்காலம் என்பது கட்டடப் பணி போல அல்ல; வேலை ஒரு இடத்தில் செய்து முடித்து, பிறகு மற்ற இடத்திற்கு செல்லலாம் என்பதுபோல கிடையாது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரும்போது முதலில் சாலையில் காலடி வைக்கின்றனர். எனவே, நாங்கள் பணிகளை வேகமாக செய்து கொண்டிருக்கிறோம். நெடுஞ்சாலைத் துறை இந்த இலக்கை அடைய முடியும்.

தமிழ்நாட்டில் சுமார் 66,000 கிலோமீட்டர் நீளமான நெடுஞ்சாலைகள் உள்ளன. இதுபோன்ற பெரிய துறையில் கால அவகாசம் பார்க்காமல், எப்போதெல்லாம் நேரம் கிடைக்கின்றதோ அப்போதெல்லாம் சாலை பணிகளை மேற்கொள்கிறோம்.

மழைக்காலங்களில் பாதுகாப்பு கருதி தேவையான உபகரணங்களை பயன்படுத்தி பணிகளை மேற்கொள்கிறோம். மழைக்காலம் என்பதற்காக நாங்கள் பணிகளை நிறுத்துவதில்லை. பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் (safety measures) மேற்கொள்ளப்படுகின்றன.

மத்திய கைலாஷ் மேம்பாலம் குறித்தான கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் :

நீங்கள் "செப்டம்பர்" என்று கூறியிருந்தீர்கள். ஆனால் நான், அக்டோபருக்குள் முடியும் எனவே நம்புகிறேன் என்று முன்பே குறிப்பிட்டுள்ளேன். அந்தப் பணிகளை நான் கடந்த வாரம், பத்திரிகையாளர்கள் இல்லாத நேரத்தில் நேரில் சென்று பார்வையிட்டேன். பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள வேறுபாடு என்னவென்றால் – புறநகர் பகுதிகளில் பைபாஸ் சாலைகள் உள்ளதால், இரவும் பகலும் பணிகளை நடத்த முடிகிறது. ஆனால் சென்னையில், காவல்துறையின் அனுமதி தேவைப்படுகிறது. அதிகபட்சமாக இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை மட்டுமே பணிக்கான அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த நேரத்திற்குள் பாதாள சாக்கடை பணி, பாலம் கட்டும் பணி, பெரிய உபகரணங்கள், ஐ-பீம் போன்றவற்றை கொண்டு வர வேண்டிய அவசியம் உள்ளது. அந்த நேரக் கட்டுப்பாடுகள் காரணமாகவே பணிகளில் சற்று தாமதம் ஏற்படுகிறது.

முதலமைச்சரின் திட்டங்கள் – உயர்மட்ட சாலைகள் குறித்தான கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு அவர்களின் பதில் :

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, போக்குவரத்து நெரிசல் அதிகமான இடங்களில் உயர்மட்ட சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் கட்டுவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தத் திட்டங்களின் கீழ், 3.20 கி.மீ தொலைவில் அண்ணா சாலையில் ஒரு உயர் மட்ட மேம்பாலம் கட்டப்படுகின்றது (தேனாம்பேட்டையில் ஆரம்பித்து சைதாப்பேட்டை வரை).

திருவான்மியூர் நோக்கி செல்லும் சாலை தற்போது மிகுந்த நெரிசலை சந்தித்து வருகிறது. இதற்காக 14 கி.மீ நீளமுடைய புதிய மேம்பாலம் கட்டும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் நீளமான மேம்பாலமாக இருக்கும். அந்த பணிக்கான ஒப்பந்தங்களும், டெண்டர் அறிவிப்புகளும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.

தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பாலம் எப்போது திறக்கப்படும்? குறித்தான கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் :

தற்போதைய ஒப்பந்த காலத்தின்படி, இந்தப் பாலம் நவம்பர் 2026 வரை முடிக்க வேண்டும். இருப்பினும், நாங்கள் அதை பொங்கலுக்குள் முடிக்கலாமா என்ற இலக்குடன் பணிகளை வேகமாக செய்து வருகின்றோம். இந்தப் பாலம் RC Foundation (ரீ-இன்போர்ஸ்ட் கான்கிரீட்) கொண்டு கட்டப்படுகிறது. மேல்பகுதியில் முழுக்க முழுக்க இரும்பு ஸ்ட்ரக்சர் அமைக்கப்படுகிறது.

இந்தியாவின் பல இடங்களில் (பரோடா, ஹைதராபாத், மும்பை, சத்தீஸ்கர், தமிழ்நாட்டில் கும்மிடிப்பூண்டில் உள்ள பெண்ணார் தொழிற்சாலையில்) இந்த இரும்பு பில்லர் மற்றும் ஐ பீம் ஸ்ட்ரக்சர்கள் தயாராகின்றன. அனைத்து இடங்களிலும் கட்டுமான தரம் சரியாக உள்ளதா என்பதை நாங்களே நேரில் சென்று ஆய்வு செய்கிறோம்.

அடுத்த வாரம் சத்தீஸ்கர் செல்ல உள்ளோம். Quality Control Engineers-ஐ நியமித்து, ஒவ்வொரு இடத்திலும் ஒத்துழைப்புடன் பணிகள் நடைபெறுகின்றன.

பண்ருட்டி சாலை தொடர்பாக கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் :

இந்த சாலை முழுவதும் தேசிய நெடுஞ்சாலைத்துறை (NHAI) கட்டுப்பாட்டில் உள்ளது. இது மத்திய அரசின் பொறுப்பு. நாங்கள் கடந்த 4 ஆண்டுகளாக, தொடர்ந்து மத்திய அமைச்சர்களிடம், கடிதம் மூலம் கேட்டுக்கொண்டு இருக்கிறோம். முதலமைச்சர் அவர்களும் இரண்டு முறை நேரில் சென்று கேட்டுள்ளார்.

தற்போது மூன்று ஒப்பந்ததாரர்கள் மாறிய பிறகு, ஒரு புதிய ஒப்பந்ததாரர் மூலமாக பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாநில அரசு, தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. வேலை விரைவாக நடைபெறுவதற்காக முழு ஒத்துழைப்பும் வழங்கப்படுகின்றது. இவ்வாறு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

Also Read: திருட்டு வதந்தி : பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் அடித்து கொலை - உ.பி-யில் அதிர்ச்சி!